பண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு
டெல்லி: வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு அக்போடபர், நவம்பர் மாதங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளையும் பாடாய் படுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலேயே இந்தியாவில் வைரஸ் பாதிப்பு சற்று மோசமாக இருந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
இருப்பினும், சில மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்படவே அது நாட்டை புரட்டிப் போட்டுவிட்டது.
2ஆம் அலை
அந்தச் சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் 4000ஐ தாண்டி சென்றது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. ஒரு புறம் கொரோனாவாலும் மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் சுகாதார உட்கட்டமைப்பு எந்தளவு மோசமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பின்னரே கொரோனா பாதிப்பு குறித்த நடவடிக்கைகளில் மத்திய அரசி தீவிரமாக இறங்கியது.
பண்டிகை காலம்
அடுத்து வரும் காலம் இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் உச்சபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என வேண்டும் எனத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷனும் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என்று எச்சரித்தார். மேலும், சில மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் அடுத்து வரும் பண்டிகை காலத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் வெளியீடு
இது தொடர்பாகப் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், "அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களும் விரிவான அறிக்கை (Standard of Proceedures) அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5%க்கும் மேல் இருக்கும் பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5%க்கு குறைவாக உள்ள பகுதிகளில் முன்கூட்டியே அனுமதி பெற்ற கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு ஒரு முறை
ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் கொரோனா பாசிட்டிவ் விகிதத்தைப் பெருத்துத் தேவைப்படும் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை வாரம் ஒரு முறை மாநில அரசுகள் மாற்றியமைக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் விரைவில் கொரோனா 3ஆம் அலை தாக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த கொரோனா வழிகாட்டுதல்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த மே மாதத்திற்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் சற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, கடந்த வாரம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 62.73% கேரளாவில் இருந்தும் பதிவாகியுள்ளது. நாட்டில் 33 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10% க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.