தாமரையும் மலராது.. கையும் ஓங்காது.. மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்.. கருத்து கணிப்பு முடிவுகள்
2019 லோக் சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்பது நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்பது நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாகி உள்ளது.
லோக் சபா தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுக்க தேர்தல் பரபரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
நேற்று மட்டும் ஏபிபி சி வோட்டர் சர்வே, இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் சர்வே, ரிபப்ளிக் டிவி சர்வே ஆகிய சர்வேக்கள் வெளியானது. இது அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவுகளை தெரிவிக்கிறது.
ஏபிபி சி வோட்டர் சர்வே முடிவு
ஏபிபி சி வோட்டர் சர்வேயின்படி லோக் சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 233 இடங்களில் வெற்றிபெறும். அதாவது மொத்தம் 33% இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 167 இடங்களில் வெற்றிபெறும். அதாவது 32% இடங்களை பிடிக்கும். மற்ற மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் 143 இடங்களை பிடிக்கும். அதாவது 30% இடங்களை பிடிக்கும்.
இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் சர்வே
இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் கருத்து கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 237 தொகுதிகளை வெல்லும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 166 தொகுதிகளை வெல்லும். 140 தொகுதிகளில் பிற கட்சிகள் வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி சர்வே
ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 233 தொகுதிகளை வெல்லும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 167 தொகுதிகளை வெல்லும். 143 தொகுதிகளில் பிற கட்சிகள் வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே முடிவு
அனைத்து கருத்து கணிப்பின் முடிவிலும் 2019 லோக் சபா தேர்தலின் முடிவில் தொங்கு லோக் சபாவே உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் தேவை. இதில் மெஜாரிட்டி பெற 272 உறுப்பினர்களின் பலம் தேவை. இது தேர்தல் முடிவுகளில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் முக்கியம்
இந்த இடத்தில்தான் மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டிலும் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் இந்த தேர்தலில் கிங் மேக்கராக மாறக்கூடும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் தெளிவாக தெரிகிறது. இவர்கள் எடுக்கும் முடிவே இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும்.
சிலர்
இதில் பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கூட்டணி மட்டுமே 51 இடங்கள் வரை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்கள் வரை பெறக்கூடும். இதனால் இவர்களின் 85 இடங்கள் யாருக்கு ஆதரவாக செல்கிறதோ அவர்களே ஆட்சியை பிடிக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது.