புல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்
டெல்லி: புல்வாமா தாக்குதலை அடுத்து துணை ராணுவத்தினர் தரைவழி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் இனி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.
இவர்கள் 70 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
350 கிலோ
நாட்டுக்கே பாதுகாப்பு அளிக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக பலியான வீரர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் 350 கிலோ வெடிப்பொருளை தீவிரவாதி வழியில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து உள்ளே வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான்
இது போல் வீரர்கள் கொத்து கொத்தாக பலியாவதும் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை கவலைக் கொள்ள வைக்கிறது. தற்போது உலக நாடுகளின் கோபம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.
டெல்லி- ஸ்ரீநகர்
இந்த நிலையில் துணை ராணுவ படையினர் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கும் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கும் செல்லும் போது தரை வழி கான்வாய் வாகனங்களை பயன்படுத்துவதில் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது.
7.80 லட்சம்
அதன்படி துணை ராணுவத்தினர் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல விமானங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 7.80 லட்சம் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிப்பர். காவலர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலையானவர்கள் வரை விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
விமானத்தில்
காவலர் முதல் உதவி ஆய்வாளர் நிலையிலுள்ள துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். விடுப்பில் செல்லும் போது பணிக்கு திரும்பும்போது அவர்கள் விமானத்தில் பயணிக்கலாம். விமானம் செல்ல முடியாத இடங்களில் பேருந்து, பாதுகாப்பான வாகனங்களில் அவர்கள் செல்ல வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.