5 பேருக்கு மேல் வீடு, வீடாக பிரசாரம் செய்ய கூடாது... வேட்பாளர்களுக்கு கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்!
டெல்லி: சட்டசபை தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும். அதற்கு மேல் அவருடன் ஆட்கள் வரக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: அதற்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குபதிவு தொடங்கும் என்றும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா
இதனால் இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.கொரனா வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார். வாக்காளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் வேட்பாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தார் சுனில் அரோரா. எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும். அதற்கு மேல் அவருடன் ஆட்கள் வரக்கூடாது.
இதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி. கூடுதல் வாகனங்கள் கொண்டு செல்லக் கூடாது. வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ளலாம். ஆனால் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: அதற்கு மேல் கூட்டம் கூடக்கூடாது. வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும் என்று சுனில் அரோரா தெரிவித்தார்.