வாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்
டெல்லி: வாகனங்களில் செல்லும்போது இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கத் தேவையில்லை.
இதுவரை இருந்த விதிமுறைப்படி ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாவிட்டால் ஓட்டுனரிடம் அபராதம் விதிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்லும் போது அவை தொலைந்து விட்டால் மறுபடியும் அதைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் வாகன உரிமையாளர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
சாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு
செல்போன் ஆப்
இதன்படி ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று, காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களின் ஹார்டு காப்பியை எப்போதுமே கார் அல்லது பைக் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதே நேரம் அந்த ஆவணங்களை புகைப் படம் எடுத்து செல்போனில் காட்டுவதும் செல்லத்தக்கது கிடையாது. அதற்கு பதிலாக எம்-பரிவாகன் (M-Parivahan app) என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் உங்களது ஆவணங்களை சேமித்து வைத்துக்கொண்டால் வாகன சோதனையின்போது காண்பித்துக் கொண்டு சென்றுவிடலாம்.
சட்டப்படி செல்லும்
கடந்த வருடமே மத்திய அரசு இது போல ஒரு அறிவுரையை வெளியிட்டிருந்த போதிலும் தற்போது சட்ட ரீதியாக இந்த உத்தரவுக்கு கிடைத்துள்ளது. கடந்த வாரம் விதிமுறையில் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றத்தின்படி, அக்டோபர் 1ம் தேதி முதல், வாகன சோதனையின்போது, வாகன ஓட்டி வழங்கும் தகவல்கள் ஆன்லைன் முறையில் சோதனை செய்யப்பட்டு அது சரியாக இருக்கும் பட்சத்தில் அபராதம் ஏதும் இன்றி வாகனங்கள் கிளம்பிச் செல்ல அனுமதிக்கப்படும்.
ஆவண முடக்கம்
விபத்து, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட மோசமான நேரங்களில் கூட வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஆவணங்களை போலீஸ் பறிமுதல் செய்ய தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே முடக்கிவிட முடியும்.
பயிற்சி தேவை
இவ்வாறு உத்தரவு மாற்றப்பட்டு இருந்தபோதிலும் இந்த விஷயத்தில் ஒரு சவால் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. காவல்துறையில் கான்ஸ்டபிள் மட்டத்தில் உள்ள பல ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலமாக இதுபோன்ற செயலியை இயக்கி பரிசோதனை செய்து பழக்கம் இல்லை. இன்னும் தொழில்நுட்ப பயிற்சி இல்லை. அவர்கள் முழு பயிற்சி பெறும்போது இந்த நடைமுறை இன்னமும் எளிதாகும்.
டிஜிலாக்கர்
எம்-பரிவாகன் மட்டுமின்றி, டிஜிலாக்கர் (digilocker) என்ற ஆப்பிலும் உங்கள் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, போலீசாரிடம் காண்பித்துச் செல்லலாம். ஆக மொத்தம், ஒரு செல்போன் இருந்தால் எந்த ஆவணமும் இன்றி, உங்களால் இனி வாகனங்களில் பயணிக்க முடியும். அதேநேரம், ஆவணங்கள் இந்த ஆப்பில் ஏதாவது ஒன்றில் முறையாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துவிட்டு வாகனங்களை கிளப்புங்கள். டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளாமல், ஆவணமும் இல்லாமல் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம் மக்களே.