இனி ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்து கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய அறிவிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுளளது.
நிலத்தடியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய கிணறுகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பூமிக்குள் இந்த கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழலின் அனுமதி பெறுவது அவசியம்.
அது போல் இந்த கிணறுகளை அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
இந்த நிலையில் இந்த விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. அதே போல கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்த தேவையில்லை.
இந்த புதிய விதிமுறையால் ஏற்கெனவே ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு எடுக்க பல நிறுவனங்கள் அனுமதி கோரி சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பங்கள் அளித்தது செல்லாது. எனவே அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து கிணறுகளை அமைக்க முடியும்.