முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது.. முக்கிய விஷயத்தை கூறி இந்து மகாசபை சீராய்வு மனு
டெல்லி: முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது என அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது இந்து மகாசபை.
70 ஆண்டு கால அயோத்தி வழக்கை கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கியது. மேலும் முஸ்லிம்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியிலோ அல்லது சன்னி வக்பு வாரியம் சுட்டிக் காட்டும் இடத்திலோ 5 ஏக்கர் இடத்தை மசூதி கட்ட கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உள்பகுதியும் வெளிப்பகுதியும் இந்துக்களுக்கே சொந்தமானது. எனவே முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டியதற்கான காரணம் ஏதும் இல்லை என இந்து மகாசபை கூறுகிறது.
இதையடுத்து தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி இந்து மகாசபை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களில் இது 7-ஆவது மனுவாகும். அதிலும் இந்துக்கள் சார்பில் தாக்கல் செய்யப்படும் முதல் சீராய்வு மனு. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 6 சீராய்வு மனுக்களும் முஸ்லிம்கள் தாக்கல் செய்ததாகும்.
இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் மவுலானா முஃப்தி ஹல்புல்லா, மவுலானா மஹ்ஃபூசூர் ரஹ்மான், மிஸ்பாஹுதீன், முகமது உமர், ஹாஜி நஹ்பூப் ஆகிய 5 பேர் இதுவரை மறுசீராய்வு தாக்கல் செய்திருந்த நிலையில் 6-ஆவதாக முகமது ஆயூப் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த சீராய்வு மனுவை இந்து மகாசபையின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்கிறார்.