காத்து வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்.. போதும்ப்பா.. 2 வருடங்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி துவங்க தடை
டெல்லி: இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளை துவங்க கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மொத்தம், 27 லட்சம் சீட்டுகள் உள்ளன. இளநிலை படிப்பில் 14 லட்சம் சீட்டுகள் இருக்கிறது. முதுநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களும், டிப்ளமோ படிப்புகளுக்கு 11 லட்சம் இடங்கள் இருக்கின்றன.
சில ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் 50 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் புதிதாக தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கமிட்டியின் தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள தொழிநுட்பக் கல்லூரிகளில்தான் அதிக இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு மொத்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் 67 ஆயிரத்து 715 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 314 இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் 57 ஆயிரத்து 259 இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் தொழில்நுட்பக்கல்வி பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்து இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் 518 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை உத்தரவாதம் இல்லாத நிலையில் பெரும்பாலான மாணவர்கள், பொறியியல் படிப்புகளை தவிர்த்து வருவதாக தெரிகிறது. இது போன்ற குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்ப கல்வி துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே துறை சார்ந்தவர்களை கருத்தாக உள்ளது.