ஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்
மும்பை: ஆம் ஆத்மி கட்சியில் தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையுமே இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஜே.டி.யூ. துணைத் தலைவராக இருந்த பிரஷாந்த் கிஷோர், சி.ஏ.ஏ. விவகாரத்தில் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் ஜேடியூவில் இருந்து பிரஷாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு பிரஷாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் உதவியாக இருந்தன. இதனால் ஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணையலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆம் ஆத்மியில் இணைவதா? இல்லையா? என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.