இந்திய நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது- ராணுவம் தயார் நிலையில் உள்ளது: அமித்ஷா
டெல்லி: இந்தியாவின் நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது; இந்திய ராணுவமும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்க தயார் நிலையில் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல், ஆக்கிரமிப்பு முயற்சிகளை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 60 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
போருக்கு தயார்- சீனா
இதனையடுத்து இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் இருநாடுகளிடையே இதுவரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதனிடையே தமது ராணுவ வீரர்களை தயார்நிலையில் இருக்குமாறு சீனா அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். தைவான், தென்சீன கடல் பிராந்தியங்கள், இந்தியாவுடனான எல்லை பிரச்சனை நீடிக்கும் நிலையில் சீனா அதிபரின் போருக்கு தயாராகுங்கள் என்கிற இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமையன்று டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது
எல்லையில் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த ராணுவம் தயாராகவே இருக்கிறது. நமது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாம் கண்காணித்து வருகிறோம். நம் நிலப்பகுதியை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.
தயார் நிலையில் நமது ராணுவம்
நாட்டின் எல்லைகளையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் வல்லமை நமது ராணுவத்துக்கு இருக்கிறது. அனைத்து நாடுகளே எப்போதும் போருக்கு தயார் நிலையில்தான் இருக்கும். ஆக்கிரமிப்புகளில் இருந்து தடுக்க ராணுவத்தை தயார்நிலையில்தான் வைத்திருப்பார்கள். இந்தியாவும் தனது ராணுவத்தை தயார் நிலையில்தான் வைத்திருக்கிறது.
சுமூகப் பேச்சுவார்த்தைகள்
எல்லை பிரச்சனைகள் தொடர்பாக ராஜதந்திர ரீதியாகவும் இதர வழிகளிலும் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இருநாட்டு ராணுவத்தினரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.