கோவேக்சின் செயலாற்றல் எப்படி? டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவேக்சின் தடுப்பூசி, உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக செயலாற்றுமா என்பது பற்றி தெரியாது எனவும், இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தால் உறுதி செய்து சொல்வதாகவும், அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணா எல்லா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவ நிபுணர் குழு சமீபத்தில் தடுப்பூசி அனுமதி வழங்குவதற்கான ஆய்வு மேற்கொண்டபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டுக்கு அனுமதி வழங்கியது.
இதற்கு, அடுத்த நாளே இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டாளர் அமைப்பும் இதற்கு அனுமதி வழங்கியது.
இருப்பினும், இன்னும் முழுமையாக தரவுகள் வெளியாகாத நிலையில், இந்திய தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி இருப்பது உயிரோடு விளையாடுவதற்கு சமம் என்று எதிர்க் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்காக இந்த மருந்துக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக சில கட்சிகள் கூறின.
பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கை கோர்க்கும் பிரேசில்... முதல்கட்டமாக 50 லட்சம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர்
இந்த நிலையில், கிருஷ்ணா எல்லா இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தடுப்பூசி தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்கள் கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். எனது தரவுகள் பற்றி வெளிப்படையாக நான் தெரிவிக்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த தடுப்பூசி பற்றிய இணையதளத்தில் பொறுமையாக சென்று வாசித்தாலே, அவர்கள் புரிந்துகொள்ள முடியும். எத்தனையோ கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச இதழ்கள் பலவற்றில் இதுவரை 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் கிடையாது. 12 நாடுகளில் இந்த தடுப்பூசிக்கான கிளினிகல் டிரையல் நடத்தியுள்ளோம். இதில் பிரிட்டனும் ஒரு நாடு.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் சில நாடுகளிலும் இந்த டிரையல் நடத்தினோம் என்பதை இப்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களை இந்திய நிறுவனமாக மட்டும் பார்க்கக்கூடாது. நாங்கள் உண்மையில் சர்வதேச நிறுவனம்.
தடுப்பூசி தயாரிப்புகளில் எங்கள் நிறுவனம் நீண்ட கால அனுபவம் கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உருமாறிய கொரோனாவை இந்த தடுப்பூசியால் தடுக்க முடியுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதுகுறித்து தெரியாது என்றும், இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தால், உறுதியாக, டேட்டா மூலம், சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.