என்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா..? அரசு போட்ட புது ரூல்ஸ்!
டெல்லி: கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம் கொடுக்க கூடாது என்றும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்லக்கூடாது என்றும் மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்துள்ளது.
Recommended Video
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு ஜூன் 8ம் தேதி முதல், நாடு முழுக்க உணவகங்களுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடும் வசதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
சிலைகளை தொடக் கூடாது.. ஒரு மெனு கார்டு ஒரு முறை மட்டுமே.. வெளியானது கோவில்கள், உணவகங்களுக்கு ரூல்ஸ்
நெறிமுறைகள்
சலுகைகள் வழங்கப்பட்டாலும் கூட, பல்வேறு கெடுபிடிகளும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்று அந்த வழிகாட்டும் நெறிமுறைகள் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான சில பரிந்துரைகள் அல்லது நெறிமுறைகள் என்பது வித்தியாசமாக இருக்கிறது அது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
சிலைகளை தொடக் கூடாது
வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே செல்வதற்கு முன்பாக பக்தர்கள் தங்களது, கை, கால்களை தண்ணீரில் கழுவ வேண்டும். சோப்பு போட்டு கழுவலாம். வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே பிரசாதம் வழங்க கூடாது. அதேபோல, புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படக் கூடாது. புனித நூல்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம்
தமிழகத்தில் பெருமாள் கோவில்களில், துளசி தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படும். இதேபோன்று பெருமாள் கோவில்களில் புளியோதரை பிரசாதமாக வழங்கப்படுவது உண்டு. அம்மன் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் சில கோவில்களில் வெண்பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுவது வழக்கம். இப்போதைக்கு இதுபோல பிரசாதங்கள் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. தேவாலயங்களில் புனித நீர் தெளிப்பது நடைமுறையாகும். அதுவும் செய்யக் கூடாதாம்.
குழந்தைகள், முதியவர்கள்
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் பிற உடல் உபாதைகள் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
இத்தனை கெடுபிடிகள், விதிமுறைகளுக்கு நடுவே எப்படியாவது இறைவனை தரிசனம் செய்து விட வேண்டும் என்று நினைக்கக்கூடிய மக்கள்தான் கோவிலுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 8ம் தேதி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட பிறகுதான், இந்த விதிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.