ஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்
Recommended Video
டெல்லி: ஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன் ரெட்டி விளக்கம் அளித்திருக்கிறார்.
ராஜ்யசபாவில் வைகோ இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், ஒரே நாடு ஒரே மொழி என, உள்துறை அமைச்சர் அறிவித்தாரா? இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்று சொன்னாரா? ; இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றனவா? குறிப்பாகத் தென் இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அத்தகைய போராட்டங்கள் நடந்தனவா?
எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையாக நடுவண் அரசு கருதிச் செயல்படுமா? தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செலவிட்டுள்ள தொகை குறித்த புள்ளி விவரங்களைத் தருக என வைகோ கேட்டிருந்தார்.
இதற்கு உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: ஒரே நாடு ஒரே ஆட்சி மொழி என்ற கருத்து எதுவும் அரசிடம் இல்லை.
இந்திய அரசியல் சட்டம், அனைத்து மாநிலங்களையும் சமமாகவே கருதுகின்றது. மொழிப் பிரச்சினைகள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பொதுவான அதிகார வரையறைக்குள் இடம் பெறுகின்றது.
மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, மொழிகளின் வரிசைப்படி மானியங்கள் செலவிடப்படுவது இல்லை. இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்துக்கான நிதி, இந்தி மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சொற்களை உருவாக்கி வரையறுக்க நிதி, சிந்தி, உருது, சமஸ்கிருதம், இந்தி, செம்மொழி தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்ட மானியம் ஆகியவை குறித்தும் கிஷன் ரெட்டி விவரித்தார்.