ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவிற்கு மத்திய அரசு காரணமா? மோடி விளக்கம்
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவில் எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்த போதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.
டிமானிடைசேஷன் திடீர் முடிவல்ல.. திட்டமிடலுடன் செய்யப்பட்டது.. பிரதமர் மோடி பேட்டி
அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அது மட்டுமில்லாமல் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசு வழங்கும் ஈவுத்தொகையை தருமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
நிதி அமைச்சகத்துடன் உரசல்
இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் உர்ஜித் படேல் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாசை அறிவித்தது.
புத்தாண்டில் பிரதமர் மோடி பேட்டி
இந் நிலையில் டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பிரத்யேகமாக பேட்டியளித்தார். துல்லியத்தாக்குதல், ராமர் கோயில் என பல விவகாரங்கள் குறித்து அவர் கருத்துகளை அப்போது தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விலகலுக்கு காரணம் என்ன என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
உர்ஜித்தின் ராஜினாமா முடிவு
அது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ஆறு, ஏழு மாதங்களாக தமது ராஜினாமா குறித்து என்னிடம் கூறி வந்தார். அப்பொழுதே தமது ராஜினாமா முடிவை அவர் எடுத்துவிட்டார். சொந்த காரணங்களுக்காக தான் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
உர்ஜித்துக்கு சொந்த பிரச்னைகள்
சொந்த பிரச்னைகள் உள்ளது என்பதை அவர் எழுத்து மூலமாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். அவரது பதவி விலகலுக்கு அரசியல் நிர்பந்தம் காரணம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.
மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை
உர்ஜித் படேலின் பதவி விலகலுக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவருக்கு மத்திய அரசு எந்த அழுத்தமும் தரவில்லை. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது, உர்ஜித் படேல் திறம்பட பணியாற்றினார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.