டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது...அது அவர்கள் விஷயம் என தெரியவில்லையா.. காங். தலைவர் கேள்வி
டெல்லி: டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, அது அவர்கள் உள்நாட்டு விஷயம் என தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விவசாயிகள் போராட்டிதிற்கு சர்வதேச பிரபலங்கள் தரும் ஆதரவை விமர்சிப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின், போராட்ட களத்தில் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என பிரபல பாப் பாடகி ரிஹான்னா ட்வீட் செய்திருந்தார். அவரை தொடர்ந்து மியா கலிஃபா, கிராட்டா தன்பெர்க் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர்.
இருப்பினும், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும் இதில் அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் பாலிவுட் நடிகர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவிலுள்ள சில தேசியவாதிகள் அமெரிக்காவுக்குச் சென்று டிரம்ப் அரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். அதேபோல ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தியாவில் போராட்டம் நடத்தியபோதும் யாரும் நம்மிடம் கேள்வி கேட்கவில்லை,
ஆனால் ரிஹான்னா மற்றும் கிராட்டா தன்பெர்க் நமது விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசும்போது மட்டும் இங்குத் தேவையில்லாத சலசலப்பு ஏற்படுகிறது. நாம் இப்போது ஒரு உலகளாவிய கிராமத்தில் வாழ்கிறோம்.
எந்தவொரு விமர்சனத்திற்கும் நாம் ஏன் பயப்பட வேண்டும். விவாசியகள் உற்பத்தி செய்து கொடுத்த உணவை உண்டுதான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். எனவே, போராடும் விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே நல்லது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.