தமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்த தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.
தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு 50 மீட்டர் உயரத்தில் புதிய அணை ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வழக்கு
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உரிமை கோரமுடியாது
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கர்நாடகா குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறியதுடன், ஆற்றுநீர் தங்களுக்கு உரியது என்றும் தமிழகம் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தது.
அணை கட்ட முடியாது
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று கூறியது. மேலும் பெங்களூரு, கோலார் உள்ளிட்ட மாவட்ட குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டுவதாகவும், அதற்கு முழு உரிமை உள்ளது எனவும் இதுதொடர்பாக பிற மாநிலத்திடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனவும் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தது.
தடையில்லை
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்து. அதன்படி தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட எந்த தடையும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.