அயோத்தி வழக்கில் சீராய்வு மனு இல்லை.. 5 ஏக்கர் நிலம் பற்றி பின்னர் முடிவு: சன்னி வக்பு வாரியம்
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று உத்தர பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் முடிவெடுத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற, மிக முக்கியமான வழக்கில், உச்சநீதிமன்றம், கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்புக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், முஸ்லீம்களுக்காக 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில், முஸ்லீம்கள் தரப்பாக வாதிட்டது, உத்தர பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம். இந்த தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவின.
சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேண்டாம் என்றும் சன்னி வக்ஃப் வாரியத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்தன. இதுகுறித்து, முடிவு செய்ய, லக்னோவில் இன்று, சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, சன்னி வக்ஃப் வாரியத்தின் நிர்வாகி அப்துல் ரசாக் கான், "பெரும்பாலான உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள். எனவே, சீராய்வு மனு தாக்கல் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
அயோத்தி நகருக்குள்ளாக, சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், அதை முஸ்லீம் தரப்பே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்று, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
இதுபற்றியும், இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி அப்துல் ரசாக் கான் கூறுகையில், மசூதி கட்டுவதற்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்த பிறகு, அதை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று, இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.