கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது வதந்தி- மத்திய அரசு விளக்கம்
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என வெளியான செய்திகள் வதந்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட் தடுப்பு மருந்தின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமென்று சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களில் ஒரு பிரிவினரிடையே பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் பொய் தகவல்கள் பரவி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் தெரிவித்தன.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு!
தற்போதுள்ள எந்த தடுப்பு மருந்தும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது; விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது பரிசோதித்து பக்க விளைவுகள் இல்லை என்று உறுதியான பின்னரே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.