"ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால்.." மும்பை ஹைகோர்ட் சர்ச்சை தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை
டெல்லி: பெண் மார்பகங்களை ஆடையை நீக்காமல், தொடுவது, தடவுவது போன்றவை பாலியல் தாக்குதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் வராது என்று சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு நாடு முழுக்க அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது நபர், 2016ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். தக்க நேரத்தில் சிறுமி தாய் சென்றதால் தொடர்ந்து நிகழவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிறுமியிடம் அத்துமீறல்
குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. மார்பகங்களை தொட்டது, அழுத்தியது போன்ற குற்றச் செயலில் அந்த நபர் ஈடுபட்டதால், பாலியல் தாக்குதல் பிரிவின்கீழ் அந்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்தார்.
அரசு தரப்பில் போஸ்கோ சட்டத்தின் 8வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாகும். ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா இந்த சட்டத்தின்கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
தோல் மீது தோல் படவில்லை
சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது. இவ்வாறு நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஒரு வருடமாக குறைப்பு
போஸ்கோ சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க முடியாது என கூறிய நீதிபதி, அதேநேரம் ஐபிசி 354 இன் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் மற்றும் ரூ .500 / - அபராதம் செலுத்த தீர்ப்பு வழங்கினார். முன்னதாக இந்த வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் போக்ஸோ சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவு 354 ன் கீழும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இப்போது ஹைகோர்ட் அதை ஒரு வருடமாக குறைத்தது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளி விடுதலையாகும் சூழ்நிலை உருவானது. இதனால் நாடு முழுக்க தீர்ப்பு பற்றிய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இதையடுத்து மத்திய அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு, நேற்று, இந்த விவகாரத்தை எழுப்பினார்.
பாலியல் பலாத்காரம்
மகாராஷ்டிரா ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று பயமாக இருக்கிறது. ஆடையோடு சேர்த்து பாலியல் கொடுமை செய்தால், வழக்கு பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையை எடுத்து நடத்த வேண்டும். நான் இந்த வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்வதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பாலியல் வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்யப்படும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம், அட்டார்னி ஜெனரல் தனது மனுவை தாக்கல் செய்ய கால அவகாசமும் வழங்கியது. இரண்டு வாரங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.