பேச்சுவார்த்தை நடத்தலாம்... போர் வேண்டாம்… மன்மோகன் சிங் கருத்து
Recommended Video
டெல்லி: எல்லையில் போர் பதற்றம் நிலவும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தாக்கி கொல்ல கூடாது என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வறுமை, நோய் போன்றவை சவாலாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய மன்மோகன்சிங், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் விரைவில் தணியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதிரடித் தாக்குதல்
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து, போர் பதற்றம் நிலவுவதால் மத்திய அரசுக்கு துணை நிற்பதாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
படைகள் குவிப்பு
துரதிஷ்டவசமாக பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கொடூரமாக தாக்கி சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரம், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.
எஃப் 16 போர் விமானம்
இந்தியாவின் போர் விமானமான மிராஜ் 2000 விமானத்தை தாக்கி அழித்து விட்டதாக கூறி, அதற்கான புகைப்படத்தையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இந்த நிலையில், இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தின் பாகங்கள் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
பழி தீர்த்தது
புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்தார். இதனை அடுத்து பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளை இந்திய விமானப்படை கொன்று பழி தீர்த்தது.
அரசு அனுமதி அளிக்கவில்லை
முன்னதாக, மும்பை தாக்குதல் நடத்தப்பட்டபோது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை தயாராக இருந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து விட்டது.
மறக்கமுடியாத பதிலடி
தற்போது மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு மறக்கமுடியாத பதிலடியை இந்திய விமானப்படை அளித்துள்ளது என்று முன்னாள் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.