எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை... விமானப்படை தளபதி பதவ்ரியா!!
டெல்லி: எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல் நிலவுகிறது என்று விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவ்ரியா இன்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்கேஎஸ் பதவ்ரியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''எல்லையில் நடக்கும் எதிர்விளைவுகளுக்கு விரைந்து பதில் அளிக்க இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. எல்லையில் எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
தற்போது எல்லையின் வடக்குப் பகுதியில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல்தான் உள்ளது. எந்த ஒரு சூழலையும் நமது படை எதிர்கொள்ளும் என்பது உங்களுக்கும் தெரியும்.
எல்லையில் எந்த நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே படையில் சேர்க்கப்பட்டு இருக்கும் சி-17 குளோப்மாஸ்டர், சினூக், அப்பாச்சி ஆகிய போர் விமானங்களுடன் ரபேல் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவித தந்திரமான நிலையும் சமாளிக்க முடியும்.
எந்தவொரு எதிர்கால மோதலிலும் நமது வெற்றிக்கு விமானப் படை ஒரு முக்கிய உதவியாக இருக்கும். இதனால், அனைத்து தொழில்நுட்பங்களுடன் இந்தப் படை மேம்படுத்தப்பட்டுள்ளது. லேசான போர் விமானமான தேஜாஸின் இரண்டு படைப்பிரிவுகளை அதிகரித்தது மற்றும் சு -30 எம்.கே.ஐ போர் ஜெட் விமானங்களில் சில உள்நாட்டு ஆயுதங்களை மிகக் குறைந்த கால இடைவெளியில் ஒருங்கிணைத்தது ஆகியவை மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாக அமைந்துள்ளன. இது நம் நாட்டின் திறன்களை பிரதிபலிப்பதாக உள்ளன.
எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா
மேலும் அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2,700 கோடி அளவிற்கு ஆயுதங்கள், துப்பாக்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்திய சீனா எல்லையில் இருநாடுகளின் சார்பிலும் சுமார் 50,000 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்துடன் ஆயுதங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியான செய்தியில் தெரிய வந்துள்ளது.