குடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்
Recommended Video
டெல்லி: குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. வறட்சியின் காரணமாக குடிக்கவும் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் கடிதம் எழுதி உள்ளார்.
தான் வசிக்கும் பகுதியில் குடிக்கும் நீர் உவர்ப்பாக இருந்ததன் காரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண, அப்பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகளை அனுகியுள்ளார். ஆனால், தீர்வு எட்டப்படவில்லை.
குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான நீர் இல்லாததன் காரணமாக தனது மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த சந்திரபால் சிங், தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்... முன்னாள் பாஜக எம்.பி. கடிதம்
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், எங்கள் பகுதியில் உள்ள போர்வெல்லில் இருந்து எடுக்கும் நீரை குடிக்க முடியவில்லை. உவர்ப்பாக உள்ள காரணத்தினால் கால்நடைகளும் இந்த நீரை அருந்த மறுக்கின்றன. பயிர்களும் கருகிப்போகின்றன. இந்த பிரச்னை தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் பயனேதுமில்லை என்கின்றனர். ஒரு குடம் குடிதண்ணீருக்காக நாங்கள் பல கிலோ மீட்டர் தொலைவு நடக்கிறோம் என அப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
விவசாயி ஒருவர் குடிக்கவும் நீர் இல்லாமல் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃப்தட் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சஞ்சய் சாதே, தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அங்கு, ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டுள்ளது. இறுதியாக, ரூ.1.40-க்கு 750 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தார்.
விவசாயிகளின் துயரங்களை துடைக்க அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாமல் இருப்பது கோபத்தை ஏற்படுத்துவதாக கூறி, விவசாயத்தில் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பினார் என்பது நினைவிற்குறியது.