அமர் ஜவான் ஜோதியை அணைக்கவில்லை.. தேசிய நினைவுச்சின்ன ஜோதியுடன்தான் இணைக்கிறோம் -மத்திய அரசு விளக்கம்
டெல்லி: அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த தீபத்தை அணைக்கவில்லை அதை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் நினைவு சின்னத்தோடு இணைக்கத்தான் போகிறோம் என்று மத்திய அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா கேட்டில் இருக்கும் அமர் ஜவான் ஜோதியை இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இணைக்க முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான 1971 போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமர் ஜவான் ஜோதி என்ற தீ பந்தம் இந்தியா கேட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த போரில் இந்திய வீரர்கள் 3800 பேர் வரை வீரமரணம் அடைந்தனர். 50 ஆண்டுகளாக விடாமல் எரிந்து வந்த இந்த ஜோதி இன்று தேசிய போர் நினைவுச்சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே 2019ல் கட்டப்பட்ட தேசிய நினைவு சின்னத்தில் இன்னொரு தீபம் இருப்பதால் அமர் ஜவான் ஜோதியில் இருக்கும் தீபம் தேசிய நினைவு சின்னத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
50 வருட ஜோதி.. இந்தியா கேட் 'அமர் ஜவான் ஜோதி' இன்று தேசிய போர் நினைவுச்சின்ன விளக்குடன் இணைப்பு!
அமர் ஜவான் ஜோதி
அமர் ஜவான் ஜோதி இப்படி இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள், முன்னாள் ராணுவ மேஜர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, அமர் ஜவான் ஜோதியை ஆளும் பாஜக அணைக்கும் முடிவை எடுத்துள்ளது. 50 வருடமாக எரியக்கூடிய தீபத்தை அணைப்பது தவறு. இந்திய ராணுவ வீரர்களுக்கும், உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி இது. இந்த முடிவை உடனே கைவிட வேண்டும். அமர் ஜவான் ஜோதி எரிவதால் என்ன பிரச்சனை வந்துவிட போகிறது.
ராகுல் காந்தி
இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவது போல இந்த முடிவு அமைந்துள்ளது என்று பலரும் விமர்சனம் வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நம் நாட்டில் இருக்கும் சிலரால் தேசபக்தியையும் தியாகத்தையும் புரிந்து கொள்ளவே முடியாது.. நமது நாட்டு ராணுவ வீரர்களுக்காக இத்தனை நாட்களாக எரிந்து கொண்டிருந்த அழியாச் சுடர் இன்று அணையப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இருக்கட்டும்.. பரவாயில்லை...மீண்டும் நமது ராணுவ வீரர்களுக்காக அமர் ஜவான் ஜோதியை ஏற்றுவோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ராணுவ வீரர்கள்
இந்த நிலையில்தான் இந்த தீபத்தை அணைக்கவில்லை அந்த தீபத்தை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் நினைவு சின்னத்தோடு இணைக்க போகிறோம் என்று மத்திய அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு தரப்பு அளித்துள்ளதாக வெளியாகி இருக்கும் விளக்கத்தில், அமர் ஜவான் ஜோதியை நாங்கள் அணைக்கவில்லை. அந்த ஜோதியை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இணைக்கிறோம். அமர் ஜவான் ஜோதியில் 1971 போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு என்று தீபம் ஏற்றப்பட்டாலும் அந்த போரில் இறந்த யாரின் பெயரும் அங்கு இடம்பெறவில்லை.
காலனி ஆதிக்கத்தின் அடையாளம்
இந்த அமர் ஜவான் ஜோதி இருக்கும் இடமே நாம் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததற்கான அடையாளம். பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் உலகப்போரில் பலியான இந்தியர்கள் உட்பட பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்திய கேட் அமைக்கப்பட்டது. இதில் மற்ற இந்திய போர்களை பற்றிய விவரம் இல்லை. ஆனால் தேசிய போர் நினைவு சின்னத்தில் 1971 போர் உட்பட அனைத்து போர்களின் விவரமும் அடங்கி உள்ளது. அனைத்து போர்களிலும் இன்னுயிர் நீத்த இந்திய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
பொய்யான எதிர்ப்பு
எனவே அமர் ஜவான் ஜோதி இங்கு இடமாற்றம் செய்யப்படுவதுதான் சரியான முடிவு. இதை பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். 70 ஆண்டுகளாக தேசிய நினைவு சின்னம் ஒன்றை உருவாக்காதவர்கள் இப்போது தேசிய நினைவு சின்னத்திற்கு அமர் ஜவான் ஜோதி கொண்டு வரப்படுவதை பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். நமது நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கு இப்பொதுதான் முறையான மரியாதை செலுத்தப்படுகிறது, என்று மத்திய அரசு தரப்பு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதிகாரபூர்வமாக இந்த விளக்கத்தை வெளியிடவில்லை