விவசாயிகளின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத்தான் வேளாண் சட்டங்கள்.. லோக்சபாவில் மோடி பேச்சு
டெல்லி: விவசாயிகளின் எதிர்கால நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: விவசாயிகள் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் சவால்களை முறியடிப்பதற்காகத்தான் 3 விவசாய சட்டங்களை இந்த அரசு நிறைவேற்றியது. ஆனால், துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு தேவையற்ற வண்ணத்தைப் பூசி விட்டனர்.
இந்த அரசும், நாடாளுமன்றமும் போராடக்கூடிய விவசாயிகளின் உணர்வுகளுக்கு முழுக்க முழுக்க மதிப்பு கொடுக்கிறது. மத்திய அமைச்சர்கள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். விவசாயிகளிடம் என்னென்ன கவலைகள் இருக்கிறதோ சந்தேகங்கள் இருக்கிறதோ, அனைத்தையும் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசு தயாராகத்தான் இருக்கிறது.
மண்டிகளுக்கு பாதிப்பு இல்லை
புதிய சட்டங்கள் காரணமாக விவசாய மண்டிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. வழக்கம்போல செயல்படும். விவசாயிகள் தாங்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கு சென்று பொருட்களை விற்றுக் கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையும் தொடரும். இவ்வாறு மோடி பேசியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள், கோஷமிட்டனர்.
உண்மை வெளியாகிவிட கூடாது
மோடி மேலும் பேசுகையில், எனது உரையை குறுக்கீடு செய்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவது, உண்மையை வெளியே சொல்லி விடாமல் தடுக்கும் முயற்சி. பொய்களும் வதந்திகளும் அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதில் இங்கு கோஷமிடுவோர் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் இதைப் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் மதிப்பை நீங்கள் பெற முடியாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த போது, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மொத்தமாக லோக்சபாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் விவசாய சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
நீங்கள் கேட்காமலே செய்வோம்
பிரதமர் தனது உரையை மீண்டும் தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது: நீங்கள் எங்களிடம் கேட்காத நல்லவற்றையும் இந்த அரசு செய்துள்ளது. முத்தலாக், வரதட்சனை ஒழிப்பு போன்றவற்றுக்கு சட்டம் வேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லை. ஆனால் அதை நாங்கள் செய்தோம். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அவை தேவை என்பதால் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கழிவறைகள் வேண்டும் என்று யாரும் வலியுறுத்தி கேட்கவில்லை. ஆனால், நாங்கள் வீடுதோறும் கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறோம். மக்களின் தேவைகளை அறிந்துதான் ஒவ்வொரு விஷயத்தையும் மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துகிறது.
18ம் நூற்றாண்டு கண்ணோட்டம்
வருங்காலத்தில் விவசாயிகளுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. அதை ஈடுகட்டுவதற்கு இந்த மூன்று சட்டங்களும் உதவும். 21ம் நூற்றாண்டில் விவசாயிகள் சந்திக்க உள்ள பிரச்சனைகளுக்கு 18ம் நூற்றாண்டு கண்ணோட்டத்தோடு அணுகினால், அது விவசாயிகளுக்கு இழப்பாகிவிடும். நமது கலாசாரம் விவசாயத்துடன் சேர்ந்தது, விவசாயத்தை கொண்டாடும் பல பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம். நமது விவசாயிகள் சுயசார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கான சுதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
காங்கிரசால் முடியாது
இதனால்தான் மத்திய அரசு விவசாயம் சார்ந்த மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயத்தில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படவேண்டும். விவசாயத்தின் மூலமாக அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். காங்கிரஸ் கட்சி உடைந்து போயிருக்கிறது, குழப்பத்தில் இருக்கிறது. தங்கள் கட்சியின் நலனையும் காப்பாற்ற முடியாது, நாட்டின் நலனையும் அவர்களால் காப்பாற்ற முடியாது. இதைவிட துரதிஷ்டவசமானது அவர்களுக்கு என்ன இருக்க முடியும்.
தனியார் நிறுவனங்கள் முக்கியம்
பொதுத்துறை நிறுவனங்களை முன்னேற்றுவது எப்படி முக்கியமோ அதேபோல் தான் தனியார் துறையை முன்னேற்றுவது முக்கியம். உதாரணத்திற்கு தொலைத்தொடர்பு, மருந்து உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தனியார் பங்களிப்பு வந்த பிறகு எந்த அளவுக்கு அந்தத் துறை மேம்பட்டு உள்ளன. மக்களுக்கு பலன் அளிக்கின்றன என்பதை நீங்களே பாருங்கள். தனியார்துறையை குறை சொல்வதும், வசைபாடும் சிலருக்கு முன்பு வாக்குகளை அறுவடை செய்து தருவதற்கு உதவி செய்திருக்கும். ஆனால் அந்த காலம் மலையேறிப் போய்விட்டது. தனியார் துறையை கேவலமாக பேசுவது இனிமேலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது. நமது இளைஞர்களை இப்படி அவமானப்படுத்த கூடாது. விவசாயிகள் வறுமையில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அதிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். பிறரைச் சார்ந்து அவர்கள் இருக்கக்கூடாது. அந்த நிலைக்கு விவசாயிகளை உயர்த்துவதுதான் இந்த அரசின் லட்சியம். சீரான அனைத்து துறை வளர்ச்சி என்பதுதான் அரசின் நோக்கம், இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.