பொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்
டெல்லி: இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதற்கும் உருமாறிய கொரோனாவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ள வல்லுநர்கள், பொறுப்பற்ற முறையில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளே கொரோனா பரவலுக்குக் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பரவல், கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்தது.
எல்லாம் சுபம்.. அதிமுகவுக்கு அன்புமணி ராமதாஸ் சொன்ன குட்நியூஸ்.. இன்றே பைனலாகுமா? .
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போல இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கொரோனா பாதிப்பு அதிகமானதற்கு இதுவே காரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
உருமாறிய கொரோனா
ஆனால் இந்த கருத்தை ஓய்வுபெற்ற பேராசிரியரும், கர்நாடக அரசின் கொரோனா நோடல் அதிகாரியுமான டாக்டர் வி ரவி முற்றிலுமாக மறுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த அவர், நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
காரணம் இல்லை
தற்போது மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா ஊரடங்கிற்குப் பின்னரே இந்தியாவில் பரவ தொடங்கிவிட்டதாக தெரிவித்த அவர், இவை கொரோனா பாதிப்பை எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை என்றும் கூறினார். முறையான கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலேயே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?
தற்போது வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் செயல்திறன் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகக் குறையும் என்று தகவல் பரவி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், "இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
தொடரும் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.