நான்கரை வருஷமாச்சு.. ஒண்ணும் நடக்கல? 60 நாளிலா மாற்றம் கொண்டு வர முடியும்? பாஜக அரசை விளாசிய ப.சி
டெல்லி: என்ன செய்தாலும் 60 நாட்களில் பாஜக அரசால் எந்த பொருளாதார மாற்றத்தையும் இந்தியாவில் கொண்டு வர இயலாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.
ஆட்சியின் 5வது ஆண்டில் இருக்கும் மத்திய பாஜக அரசு 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தேர்தல்பிரச்சாரம், யாருடன் கூட்டணி, தொகுதி பங்கீடு என பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறது.
முக்கிய தலைவர்களான அருண் ஜெட்லி, அமித் ஷா உள்ளிட்டோரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் விரைவில் அவர்கள் கட்சி மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை திரட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளன.
எந்த கட்சி, யாருடன் கூட்டணி என்பது முழுமையாக இறுதிவடிவம் பெறாத நிலையில் பாஜகவும் தேர்தல் பணிகளை மையப்படுத்தி இறங்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி
அவர்களில் மிக முக்கியமாக அடுத்து வரக்கூடிய 60 நாட்களில் பாஜகாவால் எந்த பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது தான். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறியிருக்கிறார்.
கூட்டுக்குழு விசாரணை வேண்டும்
அவர் மேலும் கூறியதாவது:ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தான் வேண்டும். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளாக மத்தியில் ஆண்டு வரும் பாஜக அரசுக்கான கவுன்டன் தொடங்கிவிட்டது.
60 நாளில் மாற்றம் வராது
இனி என்ன செய்தாலும் 60 நாளில் பாஜக அரசால் எந்த பொருளாதார மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. நாட்டின் பொருளாதாரம் பெரும் அழிவில் இருப்பதோடு அதன் நிலைமை கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
36 ரபேல் விமானங்கள்
126 விமானங்கள் பெற திட்டமிட்ட நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு செய்தது ஏன்? மத்திய பாஜக அரசிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது. ரபேல் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணையே தேவை என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.
பதவி விலகியிருப்பேன்
நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற சர்ச்சைக்கள் எழுந்திருந்தால் நிச்சயமாக ராஜினாமா செய்திருப்பேன்.நிதியமைச்சகம் கூறும் எந்த ஆலோசனையையும் தற்போதுள்ள மத்திய அரசாங்கம் காதில் வாங்கி கொள்வதே இல்லை என்று ப. சிதம்பரம் கூறினார்.