உங்களுக்கு வந்தா ரத்தம்...எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...கல்ராஜ் மிஸ்ராவுக்கு கெலாட் பதிலடி!!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவின் ஆட்சியை கலைக்குமாறு ராஜ் பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இன்று ராஜஸ்தானில் சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுக்குமாறு ராஜஸ்தான் ஆளுநராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ராவின் வீடு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பட்டம் நடத்தினர்.
சட்டசபைக் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்காவிட்டால், ஆளுநரின் வீட்டுக்குள் மக்கள் நுழைவார்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து இருந்தார். ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கு கல்ராஜ் மிஸ்ரா அழைப்பு விடுத்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்தியாவில் பீருக்கு வந்த சோதனை.. இப்படியெல்லாம் நடக்குமான்னு யோசிக்கக்கூட முடியாத மாற்றம்!
பாதுகாப்பு யார் கொடுப்பாங்க
ஆளுநர் மாளிகையில் அசோக் கெலாட்டின் ஆர்ப்பாட்டம் குறித்து பதிவு செய்திருந்த கல்ராஜ் மிஸ்ரா, ''நீங்கள் ஆளுநர் மாளிகையை கூட காப்பாற்ற முடியாவிட்டால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து உங்களது அபிப்பிராயத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசே இப்படி நடந்து கொண்டால், பாதுகாப்புக்கு யாரை ஆளுநர் மாளிகை அணுக வேண்டும் என்பதை விளக்க வேண்டும். என்னுடைய அரசியல் அனுபவத்தில் ஒரு முதல்வரிடம் இருந்து இதுபோன்ற அறிக்கையை நான் பார்த்ததே இல்லை'' என்று தெரிவித்து இருந்தார்.
முலாயம் மாயாவதி கூட்டணி விரிசல்
ஆனால், வரலாறு வேறு மாதிரி இருக்கிறது. 1995ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவராக கல்ராஜ் மிஸ்ரா இருந்தார். அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தார். அவரது ஆட்சியை கலைக்குமாறு ஆளுநர் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது முலாயம் சிங் யாதவ் கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கைகோர்த்து இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமும் இருக்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அப்போது முலாயம் சிங் யாதவின் ஆட்சி நாட்கள் எண்ணப்படுகிறது என்று கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன
பாஜகவை கன்சிராம் தொடர்பு கொண்டார். 1993ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தாலும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காரணம், பாஜகவுக்கு எதிராக கட்சிகள் கைகோர்த்தன. அப்போது பாஜக 177 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 67 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும், ஜனதா தளம் 27 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
நரசிம்ம ராவும் மாறினார்
முலாயம் சிங் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கன்சிராம் சூசகமாக தெரிவித்து இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக நரசிம்ம ராவ் இருந்தார். அவரும் முலாயம் சிங் யாதவ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தார்.
டெல்லியில் கன்சிராம்
முலாயம் சிங், கன்சிராம் கூட்டணிக்குள் குழப்பம் என்பதை தெளிவாக கல்ராஜ் மிஸ்ரா அறிந்து கொண்டார். எப்படியும் ஆட்சி கவிழும் என்று எண்ணிக் கொண்டு இருந்தார். இவர் எதிர்ப்பார்ப்பை உறுதி செய்வது போல ஜூன் ஒன்றாம் தேதி முலாயம் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மாயாவதி அறிவித்தார். அப்போது டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த கன்சிராம், கட்சிப் பொறுப்பை மாயாவதியிடம் கொடுத்தார்.
மோதிலால் வோரா மறுப்பு
மாயவதியின் அறிவிப்பு முலாயம் சிங் யாதவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. முலாயம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரசும் அழுத்தம் கொடுத்தது. ஆனால், ராஜினாமா செய்ய மறுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முலாயம் கோரிக்கை வைத்தார். ஆனால், இதற்கு அப்போது ஆளுநராக இருந்த மோதிலால் வோரா மறுப்பு தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தாக்குதல்
ஜூன் 2ஆம் தேதி மாயாவதி தனது எம்.எல்.ஏ.க்களை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து சந்தித்தார். அப்போது முலாயம் ஆதரவாளர்கள் அங்கு சென்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாயாவதி ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
ராஜஸ்தானில் இன்று கெலாட்
இந்த தருணத்தில்தான் கல்ராஜ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு சென்று முலாயம் அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டம் நடத்திய கல்ராஜ் புகைப்படங்கள் அப்போது வைரலாகி இருந்தன. இன்று நியாயம் கேட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ராவின் வீட்டுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.