அரே பய்யா.. அனுமான் தலித் நஹி ஹே.. ஆர்யன், ஆர்யன்.. இது மத்திய அமைச்சர் சொன்னது பாஸ்!!
டெல்லி: அனுமான் தலித் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மத்திய அமைச்சர் சத்யபால் சிங் அனுமான் தலித் கிடையாது, அவர் ஆரியர் என்று கூறி இன்னொரு சலசலப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.
ஆதித்யநாத் சொன்னதாவது நம்ம ஊர்க்காரர் அனுமான் என்று எடுத்துக் கொள்ள வழி உள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கூறியதைப் பார்த்தால் இவர் அனுமானை வந்தேறி என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.
ராமரை வைத்து நடந்த அரசியல் போய் தற்போது அனுமானை வைத்து புதிய அரசியலைக் கிளப்பி வருகின்றனர் பாஜகவினர். அனுமனை தலித் என்றார் யோகி . ஆனால் தற்போது சத்யபால் சிங் அவரை ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளது பூசலைக் கிளப்பும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக சத்யபால் சிங் பேசியதாவது:
அதாவது ராமர் காலத்தில்
ராமர் காலத்தில் ஜாதிகளே கிடையாதுங்க. எல்லோருமே ஆரியர்கள்தான். யாருமே தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது. வால்மீகியின் ராமாயணம் மற்றும் துளசிதாசர் எழுதிய ராமசரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
தலித்துகள் கிடையாது
ராமர் காலத்தில் தலித் என்ற சாதியே கிடையாது. ஆரிய இனத்தவர்கள் மட்டுமே இருந்தனர். தலித்துகளை அடக்கி ஒடுக்கவும் இல்லை. அந்த வகையில் அனுமானும் ஒரு ஆரிய இனத்தவர்தான்.
அனுமானும் ஆரியர்தான்
ஆரியம் மட்டுமே அப்போது இருந்தது. வேறு எந்த சாதியும் கிடையாது. இதை நான் தெளிவாக சொல்கிறேன். ஆரிய இனத்திலிருந்து வந்த மிகப் பெரிய மனிதர் அனுமான் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சத்யபால் சிங்.
புதுசு புதுசா கிளப்புறாங்களே
ஆரியர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. அப்படி இருக்கையில் அனுமானையும் ஆரியர் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது புது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
தேர்தல் அக்கப் போர் முடியும் வரை இதுபோன்ற புதுப் புது புரளிகள் கிளம்பி வந்து கொண்டுதான் இருக்கும்.. காதை ரெடியாகவை வைத்திருப்போம்.. கதை கேட்க!