சி.ஏ.ஏ., என்பிஆர்- என்.ஆர்.சி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ப. சிதம்பரம்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், மக்கள் தொகை பதிவேடு- தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
என்.பி.ஆர். என்பது என்.ஆர்.சியுடன் தொடர்புடையதுதான். இரண்டும் தொடர்பு கொண்டது இல்லை என்பதை ஏன் உள்துறை அமைச்சர் கூற மறுக்கிறார்?
நாங்கள் என்.பி.ஆர். மட்டும்தான் மேற்கொண்டோம். அப்போது அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு- என்.ஆர்.சி. நடைமுறையில் இல்லை. அத்துடன் 19 லட்சம் பேரை நாடற்றவர்களாக அறிவிக்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை எங்களுக்கு வரவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாங்கள் போராடுமாறு யாரையும் தூண்டவில்லை. நாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுகிறோம். அதில் பெருமைப்படுகிறோம்.
எங்களுடைய கருத்தை மாணவர்கள், இளைஞர்கள் வரவேற்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
கிரண் பேடி.. எனக்கு ஒரு டவுட்டு.. குஷ்பு கேட்ட பொளேர் கேள்வி!
சி.ஏ.ஏ. என்பதும் என்.ஆர்.சி. என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இதை மறைக்கவும் முடியாது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டுடன் கூடுதலாக சில விவரங்களை மத்திய அரசு இப்போது கேட்கிறது. எங்கே பிறந்தீர்கள்? உங்கள் தாய் தந்தையர் பிறந்த இடம் எது? உங்களுடைய ஓட்டுநர் உரிமம் எண் என்ன? ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண் என்ன? இதை எல்லாம் ஏன் கேட்கிறார்கள்?
காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களும் ஊடகங்களும் தீர்மானிக்க முடியாது. அது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.