இன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்!
டெல்லி: டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் அவரை வழிமறித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்ச, அதற்கு, நாங்கள் இருக்கிறோம் என சமாதானம் செய்தார் அஜித் தோவல்.
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக டெல்லியில் இரு மதப் பிரிவினர் நடுவே மோதல் வெடித்துள்ளது. இதில், முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் வட கிழக்கு டெல்லி பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதுவரை 22 க்கும் மேற்பட்டோர் இந்த கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு டெல்லி பகுதியிலுள்ள ஜப்ராபாத் பகுதிக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக சென்றார்.
அங்கு இஸ்லாமிய மக்களுடன் அவர் உரையாடினார். உங்களுடன் அரசு இருக்கிறது, எதற்கும் பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு தைரியம் கூறினார்.
Delhi: Situation being monitored in areas of #NortheastDelhi with the help of drone. National Security Advisor (NSA) Ajit Doval is taking stock of the situation here. pic.twitter.com/e2uaFBnAjX
— ANI (@ANI) February 26, 2020
பின்னர், நிருபர்களிடம் அவர் பேசுகையில், அங்குள்ள மக்களிடம் நான் பேசிய அளவில் அனைத்து சமுதாயத்தினர் நடுவேயும் நல்ல நட்புறவு இருக்கிறது. ஆனால் சில கிரிமினல்கள்தான் கலவரத்தை பரப்பி வருகின்றனர். அது போன்ற நபர்களை பொதுமக்களே தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். காவல்துறை இங்கே தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நான் இங்கு வருகை தந்துள்ளேன். அல்லாஹ்வின் விருப்பப்படி (இன்ஷா அல்லா) இங்கே முழுமையான அமைதி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பர்தா அணிந்தபடி ஒரு முஸ்லிம் இளம் பெண் பேட்டியின் நடுவே குறிக்கிட்டு, அவரிடம் சென்று பேச வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து தோவலும், பேசுங்கள் என்று தெரிவித்தார்.
அந்தப் பெண் தன்னை ஒரு கல்லூரி மாணவி என்று அறிமுகம் செய்து கொண்டார். அங்கு கலவரம் நடப்பதாகவும், ஆனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை, உணர்வதாகவும், உதவிக்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அப்போது அந்தப் பெண்ணிடம் பேசிய அஜித் தோவல், நான் பிரதமர் கூறிதான் இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக இந்த அரசு இருக்கிறது. இந்த காவல்துறை இருக்கிறது. நான் சொன்னபடி நடப்பேன், கவலைப்படாமல் சென்று வாருங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறோம், என்று கூறி அனுப்பி வைத்தார்.