வைரஸ் இருந்தது.. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கிங் நடந்ததா? அணுசக்தி கழகம் திடுக் விளக்கம்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கிங் நடைபெற்றதாக வெளியான செய்திகளுக்கு இந்திய அணுசக்தி கழகம் சார்பாக தற்போது அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கிங் நடைபெற்றதாக வெளியான செய்திகளுக்கு இந்திய அணுசக்தி கழகம் சார்பாக தற்போது அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஹேக்கிங் நடைபெற்று இருக்கிறது, அங்கு சைபர் தாக்குதல் நடந்துள்ளது என்று கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் புகார்களும், செய்திகளும் வெளியாகி வருகிறது. இதனால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பல முக்கிய தகவல்கள் திருடப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்திகள் தொடர்பான முழு விளக்கம் தற்போது தரப்பட்டு இருக்கிறது.
புகார்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யாரோ ஹேக் செய்துள்ளனர். அணுமின் நிலையத்தின் முக்கிய தகவல்களை திருடி விட்டனர் என்று தகவல்கள் வெளியானது. இந்த தாக்குதல் வடகொரியா ஹேக்கர்களால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. டிவிட்டரில் இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் நிறைய வெளியானது.
என்ன வைரஸ்
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் DTrack வகை வைரஸ்களில் ஒன்றாக DTrack RAT தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் ஹேக்கர்கள் ரகசிய தகவல்களை திருட முடியும். அதேபோல் மிக முக்கியமான கோப்புகளை ஹேக் செய்து எடுக்கமுடியும். பெரும்பாலும் DTrack RAT வைரஸ்கள் பணமோசடி செய்வதற்காக பயன்படுத்தப்படும்.
என்ன மறுப்பு
இதனால் அணுமின் நிலையத்தில் ஒரு ரியாக்டர் வேலை செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த புகார்கள் இணையம் முழுக்க தீயாக பரவியது. இந்த நிலையில் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையம் இதற்கு விளக்கம் அளித்தது. அதில் எங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த விதமான ஹேக்கிங்கும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை.
சரியாக இயங்குகிறது
எங்கள் அணுமின் நிலையத்தில் இரண்டு ரியாக்டரும் சரியாக வேலை செய்கிறது. இந்த ரியாக்டர்கள் எதுவும் இணையத்துடன் இணைக்கப்படவில்லை. அதனால் இந்த ரியாக்டர்களை ஹேக்கிங் செய்ய முடியாது. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
உண்மை என்ன
இந்த நிலையில் இந்திய அணுசக்தி கழகம் சார்பாக தற்போது அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணுசக்தி கழகத்தில் உள்ள கணினியில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். இது தொடர்பாக உடனடியாக இந்தியாவின் சைபர் புகார்களை கவனிக்கும் அரசு அமைப்பான Computer emergency response team இடம் தெரிவிக்கப்பட்டது.
எப்படி
இந்த புகாரை அணுசக்தி துறை கவனித்துக் கொண்டது. இவர்கள் விசாரணையில், வைரஸ் தாக்கப்பட்ட கணினி ஒன்றை பணியாளர் ஒருவர் அலுவலக நெட்வொர்க் உடன் இணைத்துள்ளார். அதனால் அலுவலக நெட்வொர்க்கில் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால் இல்லை
ஆனால் அலுவலகத்தின் கிரிட்டிக்கள் நெட்வொர்க் எதுவும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால் ரியாக்டர்கள், அணுமின் நிலையம் எதுவும் பாதிக்கப்படவில்லை, என்று கூறியுள்ளது.