21 வயது.. வெறும் நம்பர்தான்.. உலகையே உற்று பார்த்து விவாதிக்க வைத்த திஷா ரவி!
டெல்லி: டுவிட்டர் முழுக்க #21 என்ற நம்பர் அடிக்கடி ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.. திஷா ரவி கைது செய்யப்பட்ட பிறகுதான் இந்த எண் மிகுந்த முக்கியத்துவம் பிடித்துவிட்டது.
இதற்கு காரணம், திஷா ரவி வயது 21.
பெங்களூரில் உள்ள பிரபலமான மவுண்ட் கார்மல் கல்லூரியில் மாணவி.. கூடவே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுத்து வந்த ஒரு செயல்பாட்டாளர்.
சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போராளி கிரெட்டா துன்பெர்க், சமீபத்தில், இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த டூல்கேட்டை, இவர் எடிட் செய்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. இதன் மூலம் காலிஸ்தான் இயக்கங்களோடு திஷா ரவிக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறுகிறது.
இதையடுத்து, பெங்களூர் விரைந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்து, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். கிரெட்டா போட்டிருந்த ட்விட்டர் பதிவில் இருந்து இரு வரிகளை மட்டும்தான், மாற்றி தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்ததாகவும், டூல்கேட் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் நீதிபதி முன்னால் அழுதபடி கூறியுள்ளார் திஷா ரவி.
21 வயதுதான் ஆகிறது.. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி.. சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்.. இப்படி ஆயிரம் பாசிடிவ் விஷயங்கள் திஷா ரவிக்கு ஆதரவாக எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரள வைத்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் திஷா ரவி கைது செய்யப்பட்டது சரியல்ல, இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 21 வயதுதான் ஆகக் கூடிய ஒரு இளம் பெண்மணி என்பதால், ஒருவேளை அவர் தவறு செய்தால் கூட அறிவுறுத்தி இருக்க வேண்டும்.. இப்படி வக்கீல் கூட ஆஜராகாத அளவுக்கு அதிரடியாக கைது நடவடிக்கைகள் எடுத்து சிறையிலடைத்து இருக்கக்கூடாது, என்பது எதிர்கட்சி தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
வாதாட வக்கீல் இல்லை.. கைது நடவடிக்கையில் விதிமீறல்.. நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத திஷா ரவி
ஆனால், பாஜக ஆதரவாளர்களோ.. 21 வயது என்பது தவறு செய்வதற்கான ஒரு சாக்கு போக்கு கிடையாது என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருவதை பார்க்க முடிகிறது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட அதில் தார் என்ற தீவிரவாதிக்கு வயது 21 மட்டுமே. இதை சுட்டிக்காட்டும் பாஜக ஆதரவாளர்கள், வயதை காரணம் வைத்து குற்றங்களை கட்டு படுத்தாமல் இருந்தால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாதாஸ் வயது 21 தான். 'திங் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படுகிறார். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இவருக்கும் வயது 21. இந்திய ராணுவத்தில் உள்ள பல பெண்கள் வயது 21 தான். அவர்கள் நாட்டுக்காக போராடுகிறார்கள். ஆனால் சர்வதேச சதி வலையில் விழுந்து விட்டார் திஷா ரவி. இரண்டு தரப்புக்கும் இதுதான் வித்தியாசம் என்று சில பாஜக ஆதரவாளர்கள் கூறுவதையும் பார்க்க முடிகிறது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டபோது அஜ்மல் கசாப் வயது 20தை ஒட்டிதான் இருந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீனா ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த அன்குஷ் ஷர்மா என்ற இந்திய ராணுவ வீரர் வயது 21 தான். எனவே வயது என்பது சாதிப்பதற்கோ அல்லது பிறரை அழிப்பதற்கோ ஒரு தடை கிடையாது. அது ஒரு எண் மட்டும் தான். ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடும் பலரும் 21 வயது உடையவர்கள் தான். அழிவுபூர்வமான செயலில் ஈடுபட்ட சிலரும் 21 வயது உடையவர்கள் தான், என்று ஒப்பீடு செய்து சமூக வலைத்தளத்தை பெரும் சர்ச்சை காடாக மாற்றி கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
பாஜக பொதுச் செயலாளர் சந்தோஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 21 வயது.. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்.. மாணவி.. என்பது போன்றவை திஷா ரவிக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன. இதெல்லாம் இருந்துவிட்டால் இந்தியாவை உடைப்பதற்கு அவர்களுக்கு லைசன்ஸ் கொடுப்பார்களா. டூல்கேட்டை எடிட் செய்வதற்கான ஆக்சஸ் அவருக்கு எப்படி கிடைத்தது? இந்தியாவுக்கு எதிரான வாட்ஸ் அப் குழுக்களில் அவர் எப்படி இருந்தார்? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஒரே விடை இவர் 21 வயது உடையவர் என்பது மட்டுமாகவே இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் கவுரவ் பார்த்தியா கூறுகையில், ஒரு கிரிமினல், கிரிமினல் என்று தான் பார்க்கப்படவேண்டும். சிறார் குற்றவாளியாக இல்லாதபட்சத்தில், வயது, பாலினம் போன்றவை பார்க்கப்பட தேவை கிடையாது. மும்பையில் தாக்குதல் நடத்தியபோது, அஜ்மல் கசாப் வயது 21 மட்டும்தான், என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் திஷா ரவிக்கு ஆதரவாக பதிவிடுவோர்கள், 21 வயதில் ராணுவ வீரராக இருக்க முடியும் எனும்போது.. 21 வயதில் இந்த சமூகத்தை காப்பதற்கான போராளியாக ஏன் இருக்கக்கூடாது? சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு என்பது தேசவிரோத குற்றம் கிடையாது. தேச ஆதரவு நடவடிக்கைதானே. அந்த வகையில் 21 வயதில் திஷா ரவி ஒரு சாதனையாளர்தான், அவரை வேதனைப்படுத்த கூடாது என்கிறார்கள்.
"உங்கள் வயதில் நீங்கள் முதுமையினால் உயிரிழக்கக் கூடும்.. ஆனால் எங்கள் தலைமுறையினர் சுற்றுச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமயமாதல் போன்றவற்றால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகளால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக் கூடும்.. இதற்கு எதிராகத்தான் நான் போராடுகிறோம்.." என்பது சுற்றுச்சூழல்வாதிகள் கூறும் பிரபல வார்த்தை.
ஒருவேளை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, இந்த உலகம் மற்றும் இந்த நாட்டின் நன்மைக்காக, திஷா ரவி முன்னெடுப்புகளை செய்திருந்தது உறுதி செய்யப்பட்டால், அப்போது இந்த 21 வயது என்பது, "சாதனைகளுக்கு வயது ஒரு தடையில்லை" என்ற 'பிரிவின்' கீழ் வந்து பாராட்டப்படும். ஆனால் அவர் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்.. 21 வயது என்பது இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதற்கு ஒரு சாக்கு போக்கு நம்பர் கிடையாது என்ற பாஜக ஆதரவாளர்களின் கருத்து உறுதிப்படும்.
இதில் எந்த பக்கம் திஷா ரவி? என்பதை வருங்காலம் உலகிற்கு உணர்த்தத்தான் போகிறது. அதுவரை 21 என்ற எண் தொடர்ந்து சர்ச்சைகளில் கருப்பொருளாக இருக்கத்தான் போகிறது.