இந்தியாவில் சரிந்த கொரோனா கேஸ் எண்ணிக்கை.. டெஸ்ட் குறைந்துபோனதுதான் காரணம்.. சந்தோஷப்பட முடியலியே
டெல்லி: ஒரு பக்கம், கொரோனா நோய் பாதிப்பு எண்ணிக்கை நாடு முழுக்க குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டினாலும், முழுமையாக இதனால் மகிழ்ச்சியடைய முடியுமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
இப்படிச் சொல்ல சில காரணங்கள் உள்ளன. பெரும்பாலான பரிசோதனைகள் ஆர்ஏடி சோதனைகளை சார்ந்தவையாக இருக்கிறது. சரியாக பரிசோதிக்கும் முறை ஆர்டி-பிசிஆர் என்பதுதான்.
ஆர்ஏடி முறையில் ரிசல்ட் அரை மணி நேரத்தில் கிடைக்கிறது என்பதால் அந்த பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் ஐசிஎம்ஆர் வழிமுறைப்படி, ஆர்ஏடி பரிசோதனையில், பாசிட்டிவ் என்று வந்தால், பாசிட்டிவாக கருத வேண்டும், ஒருவேளை நெகட்டிவ் என்று வந்தால், ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும். ஆனால் ஆர்ஏடி மூலம் பரிசோதனை செய்யும் எத்தனை மாநிலங்கள் இந்த விதிமுறையை பின்பற்றுகின்றன என்பது சந்தேகம்தான்.
கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது
குறையும் பரிசோதனை
இந்தியா முழுக்க தற்போது நாளொன்றுக்கு 9 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த வாரம் இது 11 லட்சம் என்ற அளவுக்கு இருந்தது. பாசிட்டிவ் ரேட் குறையாத மாநிலங்களும் பரிசோதனையை குறைத்துள்ளன என்பது சரியாகபடவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
பெரிய மாநிலங்கள்
பாசிட்டிவ் ரேட் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிப்பதுதான், உண்மை நிலவரங்களை கண்டறிய உதவும். பெரிய மாநிலங்களில், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகமாக உள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படுவோரில் 13 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி நிலவரம்
10 லட்சம் பேரில் 2700 பேருக்கு பரிசோதனை என்ற விகிதாச்சாரத்தில் டெல்லியில் பரிசோதனை நடக்கிறது. ஆனால், 70 சதவீத பரிசோதனைகள் ஆர்ஏடி முறையில் நடக்கிறது. இதில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இருக்கவும் வாய்ப்பு இருப்பதுதான் ஆபத்தானது.
ராஜஸ்தானில் குறைவான பரிசோதனை
நாட்டிலேயே குறைவான பரிசோதனை செய்யும் மாநிலம் ராஜஸ்தான். 10 லட்சம் பேரில் 211 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்கிறது. ஆனால் ராஜஸ்தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மட்டுமே நடத்துகிறது. இதனால்தான் பரிசோதனை அளவை அதிகரிக்க முடியவில்லையாம். ஆனால் ரிசல்ட் சரியாக இருக்குமாம்.
கேரளா, கர்நாடகா
ஹரியானாவில பாசிட்டிவிட்டி ரேட் 11.5 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. ஹரியானாவில் 70 சதவீத பரிசோதனைகள் ஆர்டிபிசிஆர் முறையில் நடக்கிறது. கேரளாவில் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதமாக உள்ளது. அக்டோபர் மாதம் 16 சதவீதம் என்ற அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் கேரளாவில் 60 சதவீதம் டெஸ்ட் ஆர்ஏடி முறையில்தான் நடக்கிறது. அதேநேரம் கர்நாடகாவில் 32 சதவீதம் டெஸ்ட்கள் மட்டுமே ஆர்ஏடி முறையில் நடத்தப்படுகிறது. எனவே ரிசல்ட் துல்லியமாக இருக்கிறது. பீகார், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் நிலைமை ரொம்ப மோசம். அவர்கள் ஆர்ஏடி பரிசோதனையை மட்டுமே செய்கிறார்கள்.
சரியான பரிசோதனை தேவை
விரைவான ஆன்டிஜென் சோதனைகள் மிக மோசமான தவறான நெகட்டிவ் விகிதங்களைத்தான் காட்டும். எனவே ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை மட்டுமே செய்ய வேண்டும், இது கிட்டத்தட்ட செய்யப்படவில்லை என்று டெல்லியைச் சேர்ந்த மக்கள் சுகாதார அமைப்பின், உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பரிசோதனை
பீகார் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலமாக இருந்தபோதிலும், 604 புதிய கொரோனா கேஸ்கள் மட்டுமே பதிவானது. அதே நாளில் உத்தரபிரதேசம், பீகாரை விட இரண்டு மடங்கு அதிகமான கேஸ்களை பதிவு செய்தது. 1 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட டெல்லியில் 6,900 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் சோதனை எண்களை டெல்லி அரசு வெளியிடுகிறது, இதில் பயன்படுத்தப்படும் சோதனைகள் பற்றிய தகவல்கள் அடங்கும். இருப்பினும். ஆனால், ஆன்டிஜென் சோதனைகளைத்தான் பெரும்பாலும், நம்பியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக குளிரான வெப்பநிலை நிலவுவதாலும், அதிக மாசுபாடு மற்றும் மக்கள் நெருக்கம் காரணமாகவும் இன்னும் கேஸ்கள் அதிகரித்திருக்க கூடும். ஆனால் உரிய டெஸ்ட் முறையில் அங்கு டெஸ்ட் நடைபெறவில்லை என்பதால் குறைவாக காட்டுவதாக தெரிவித்தனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.