தேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்
டெல்லி: பொதுத் தேர்தல் முடிந்த கையோடு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 80 பைசா வரை உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து, விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசா அதிகரித்துள்ளது. டீசல் 73 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டதன் காரணமாக, விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 பைசா மற்றும் டீசல் 5 பைசா உயர்த்தப்பட்டது.
டெல்லியில், பெட்ரோல் விலை ரூ. 71.86 ஆக உள்ளது. மே 19ம் தேதியன்று பெட்ரோலின் விலை 71.03 ரூபாயாக இருந்தது. இதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.65.96 என்று இருந்த நிலையில், 66.69 ரூபாய்க்கு இன்று விற்பனையாகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.47 ஆகவும், டீசல் ரூ. 69.88 ஆகவும் உள்ளது. இதே போல், சென்னையில் பெட்ரோலின் விலை ரூ.74.59 க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 70.50 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.