போலிகள் ஜாக்கிரதை.. கண்டதும் நம்பாதீர்கள்.. உண்மை போலவே பரப்பப்படும் வதந்திகள்
டெல்லி: உண்மை எது என்று தெரியாமல் பொய்யான விஷயங்களை உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது மிகவும் ஆபத்தானது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் தவறான விஷயங்கள் பரப்பபடுவது பேராபத்தை உண்டாக்கும்.
சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த முடியுமோ அதே அளவுக்கு கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த முடியும்.
ஒரு நிமிடத்தில் உலகத்தின் கவனத்தையே திசை திருப்ப முடியும். ஏனெனில் இன்றைய சூழலில் அணுகுண்டை விட மோசமான ஆயுதமாக சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன. சமூக வலைதளத்தின் இருபக்கமும் கூர்மையான கத்தி போன்று இருக்கும்.
போட்டோஷாப்
இதை இப்படி நீட்டி முழக்கி சொல்லுவதற்கு பல காரணம் இருக்கிறது. முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் பிடிக்காத நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாக கருத்துக்களை பரப்பி வந்தவர்கள் இப்போது மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக அவதூறான கருத்துக்களை அவர்களையே அறியாமல் பரப்பி வருகிறார்கள். யாரோ ஒருவர் செய்யும் போட்டோஷாப் குறும்புகளை உண்மை என நம்பி இதை மக்கள் ஷேர் செய்வது நடக்கிறது.
டெல்லி பேருந்து
இப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் பேருந்தை போலீசார் கொளுத்தியதாக சிலர் பரப்பிவிட்டனர். ஆனால் உண்மையில் போலீசார் தண்ணீரைத்தான் ஊற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் பலருக்கும் தவறான விஷயங்கள் உடனே சென்றுவிட்டது.
இரண்டுபேர் இறந்ததாக
இப்போது புதிதாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் இறந்துவிட்டதாக ஒரு வீடியாவை பரப்பினர். அதன்பிறகு அதே வீடியோவை மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் இறந்துவிட்டதாக பரப்பிவிட்டனர். இப்படி என்ன ஏது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு செய்த செயலால் நாட்டின் மக்களிடையே கொந்தளிப்பையும் பதற்றத்தையும் அதிகரித்தது.
|
பயிற்சி வீடியா
உண்மையில் அப்படி இரண்டு பேர் செத்ததாக பரவும் வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் போலியானது. ஜார்க்கண்டில் போலீசார் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட வீடியோ அது. அதில் யாரும் சாகவில்லை. இதை அறியாமல் உண்மை என்று நம்பி பரப்பியது உண்மையில் பெரும் கொடுமைதான்.
மோசமாக இருக்கும்
எனவே மக்களே செய்தி நிறுவனங்களின் கார்டுகளிலோ அல்லது போட்டோஷாப் செய்த விஷயங்களோ வந்தால் அதை உண்மையா என்பதை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களில் கிராஸ் செக் செய்யுங்கள். தேவையற்ற போலியான செய்திகளை ஷேர் செய்வது மோசமான விளைவினையே ஏற்படுத்தும்.