அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தென் ஆப்பிரிக்காவில் மின்னல் வேகத்தில் உயரும் கேஸ்கள்! எந்தளவு ஆபத்தானது?
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பல ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மடங்கு வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 25ஆம் தேதி முதன்முதலில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த காலங்களில் உருமாறிய கொரோனா வகைகளே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதால் இது உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்தது,
என்னாச்சு விழுந்து உடைஞ்சிருச்சா...எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் விபத்து காட்சிகள் சிக்கியது
ஓமிக்ரான் காரணமாக உலக நாடுகள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் கூட சுமார் 57 நாடுகளுக்கு ஓமிக்ரான் ஏற்கனவே பரவியுள்ளது.
ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா ஓப்பீட்டளவில் புதிய உருமாறிய கொரோனா என்பதால் இது குறித்துப் பல முக்கிய தகவல்கள் நம்மிடம் இல்லை. ஓமிக்ரான் கொரோனா பற்றிய ஆய்வுகளை உலக நாடுகள் தீவிரமாக நடத்தி வருகின்றன. முதற்கட்ட ஆய்வில் ஓமிக்ரான் வேகமாகப் பரவினாலும் கூட அது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போதுள்ள வேக்சின்கள் ஓமிக்ரானுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குக் கடந்த நவ.29 முதல் டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 111% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நவ. முதல் வாரத்தில் 1.2%ஆக இருந்த பாசிட்டிவ் விகிதம் தற்போது 22.4%ஆக அதிகரித்துள்ளதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர தன்மை குறைவு
இது தொடர்பாகத் தென் ஆப்பிரிக்காவின் உயர்மட்ட மருத்துவமனை குழுவான நெட்கேர் நிறுவனத்தின் ரிச்சர்ட் ஃப்ரைட்லேண்ட் கூறுகையில், "இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளன. அதாவது முதல் 3 அலைகளைக் காட்டிலும் லேசான பாதிப்பையே ஓமிக்ரான் வைரஸ் ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு
முன்னதாக ஓமிக்ரான் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் கடந்த புதன்கிழமை கூறுகையில் "ஒமிக்ரான் கொரோனா மீண்டும் சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறுவதை நம்மால் தடுக்க முடியும். இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறுவது உண்மை தான். ஆனால், இதற்கு எதிரான நமது போராட்டத்தை நாம் நிறுத்திவிடக்கூடாது.டெல்டா வைரசை விட ஓமிக்ரான் தீவிரமானது இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், தற்போதுள்ள சூழலில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. ஒமிக்ரானின் சில அம்சங்கள், அதாவது வேகமாகப் பரவுவது, மிக அதிகப்படியாக உள்ள மாற்றங்கள் ஆகியவை தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.
Recommended Video
பிரிட்டன்
ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமர் போரீஸ் ஜான்சன் சில கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு 2,3 நாட்களில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதாகவும் கூடுதல் தளர்வுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அதேபோல ஆஸ்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.