கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரோன் வைரஸ்.. இந்தியாவில் முதல்முறை கண்டுபிடிப்பு.. மத்திய அரசு
டெல்லி: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து சுகாதாரத் துறை இணை செயலாளர் லவா அகர்வால் கூறுகையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அது ஓமிக்ரானா என சோதனை செய்த போது அது ஓமிக்ரான் என தெரியவந்தது. அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 65 வயது, இன்னொருவருக்கு 45 வயது.
பெங்களூர்
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து நேற்று இரவு பெங்களூர் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்புடைய நபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட அதிகமாக உள்ளது. நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்களில் 55 சதவீத கேஸ்கள் இந்த இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி
நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பா பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. உலக கொரோனா கேஸ்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்ப நாட்டை சேர்ந்தவர்கள்தான். கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஐரோப்பா நாடுகளில் 2.75 லட்சம் புதிய கேஸ்களும் 31 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா நாடுகள்
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது தென்கிழக்காசிய நாடுகளான இந்தியா உள்பட 12 நாடுகளில் கொரோனாவால் வெறும் 1.2 லட்சம் பேர் மட்டுமே கடந்த வாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனா பாதித்த கேஸ்களில் தென்கிழக்காசிய நாடுகளில் பாதிப்பானது வெறும் 3.1 சதவீதமாகும். கொரோனா கேஸ்கள் தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்து வருகிறது. என்றார்.
உருமாறிய கொரோனா
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் எனும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருவோருக்கு பயண தடை விதிக்கப்பட்டது. இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். இரு முறை உருமாறிய டெல்டாவை விட ஓமிக்ரான் கொடியது என்பதால் இது குறித்து அச்சம் எழுந்துள்ளது. இந்த ஓமிக்ரான் 32 முறை உருமாறுகிறது.