ராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி!!
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடக்கவிருக்கிறது. இதுவரை அதிகாரபூர்வமாக காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. ஆனால், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி முதல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''நடைபெறவிருக்கும் பூமி பூஜை கடவுள் ராமர், சீதை ஆசீர்வாதத்துடன், நட்பு, சகோதரத்துவம், பண்பாட்டு கூட்டு நிகழ்வாக அமைய வேண்டும். குழந்தை ராமரின் சாராம்சமே எளிமை, துணிச்சல், கட்டுப்பாடு, தியாகம் ஆகும். ராமர் அனைத்து இடங்களிலும், அனைவரிடமும் குடி கொண்டு இருக்கிறார்.
இந்தியாவின் துணைக் கண்டம் முழுவதும் பல ஆண்டுகளாக ஒற்றுமைக்கான அடையாளமாக ராமர் இருந்துள்ளார். ராமாயணம் உலக நாகரீகத்திலும், பண்பாட்டிலும் அழியாத அடையாளத்தை பதிவு செய்துள்ளது. அனைவரும் நலத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் கடவுள் ராமர்'' என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று மத்திய அரசும், பாஜகவும் அறிவிப்புகளை வெளியிட்டபோது, காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வரவேற்கவில்லை. பிரியங்காவும் இதுதொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. வெளிப்படையாக இந்துத்துவா கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை. மதச்சார்பற்ற கட்சியாகவே நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. காந்தி குடும்பத்தில் இருந்து முதன் முறையாக பிரியங்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமையின் கொண்டாட்டம்.. பிரியங்கா அறிக்கை.. முதல் முறையாக ஓபன் ஆதரவு
காங்கிரஸ் டெல்லி தலைமை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மதச்சார்பற்ற கட்சி என்பதை நிலைநிறுத்தவே காங்கிரஸ் மவுனம் காக்கிறது என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில் டெல்லி தலைமை ஒதுங்கியே இருக்கிறது என்ற பார்வைதான் கிடைக்கிறது.