இப்படியுமா பிரச்சினை வரும்.. மோடி அரசுக்கு காத்திருக்கும் வெங்காய சவால்!
Recommended Video
டெல்லி: நமது நாட்டில், வேறு எந்த காய்கறிக்கும் இல்லாத சிறப்பு வெங்காயத்திற்கு உண்டு. வெங்காய விலை உயர்வால் அரசாங்கங்களே கவிழ்ந்த வரலாறு இங்கு உண்டு.
இம்முறையும், அரசியலில் வெங்காயத்தின் பாதிப்பு எதிரொலிக்கிறது. ஆனால், இம்முறை விலையேற்றத்தால் கிடையாது. விலை குறைந்துள்ளதால்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக தோல்வியடையவும், இந்த விலை வீழ்ச்சி முக்கிய காரணம் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.
வெங்காயம் விலை குறைவு
இது மட்டுமா, 2019 லோக்சபா தேர்தலில், விலை வீழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக உறுதிபூண்டுள்ளனர் விவசாயிகள் என்கிறது அந்த செய்தி. விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோபம், மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமப்புற பொருளாதாரம்
இந்தியாவின் பல மாநிலங்களில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
விவசாயிகள்
பல விவசாயிகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் பேட்டியெடுத்துள்ளது. அவர்களில் பலரும் பாஜக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஊரக பகுதிகளில் மக்கள் வருவாயை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அவர்கள் கருத்தாக உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு
சமீபத்தில் 750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ.1000 பணத்தை, மகாராஷ்டிரா விவசாயி ஒருவர், பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து நூதனமாக தனது எதிர்ப்பை தெரியப்படுத்தியிருந்தார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இதுதான்.
அரசியலில் வெங்காயம்
1980ம் ஆண்டு, வெங்காய விலை ஏற்றத்தால் காங்கிரஸ் அல்லாத அரசமைத்து சாதித்த அப்போதைய மத்திய அரசு ஆட்சியை இழந்தது. 1998ல், டெல்லியில், பாஜக அரசு, வெங்காய விலை ஏற்றத்தால் வீழ்ச்சியடைந்தது. அப்போது சுஷ்மா சுவராஜ்தான் டெல்லி முதல்வராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.