ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்.. ஓராண்டிற்குள் செயல்படுத்த மாநிலங்களுக்கு கெடு விதிப்பு
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அடுத்த ஓராண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால், எந்த மாநிலத்தில் வசித்தாலும் அங்குள்ள கடைகளில் ரேசன் பொருட்களை பெற முடியும் ரேசன் கார்டுகளை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
இந்த திட்டத்தை மாநில அரசுகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ஜூலை மாதம் முதல் தேதிக்கு முன்னதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கான திட்டம் இது என்றார். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் இணைந்தால் உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லி என நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் குடும்ப அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது ஆகிய மத்திய பொது வினியோக திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளன என்றார்.
இத்திட்டம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பிரதமருடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறினார் பாஸ்வான், அதன் பின்னரே இத்திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் நாடு முழுவதும் உள்ள, தேசிய உணவு கழக கிடங்குகளில், போதிய அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து உணவு பொருட்களை விரைவில் விநியோகம் செய்யும் வகையில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
மக்கள் மானிய விலையில் பொருட்களை வாங்க ஒவ்வொரு மாநில அரசும் ரேசன் கடைகள் மூலம் பொது வினியோகத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இவை அனைத்தையும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டம் மூலம் ஒருங்கிணைக்க மத்திய அரசு கடந்த ஆண்டே முடிவு செய்தது
இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் ரேசன் கார்டுகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யப்பட்டு மிகப்பெரிய ஆன்லைன் புள்ளி விவர தொகுப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து பொது விநியோக கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆதார் மற்றும் ரேசன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது