வளர்ச்சி திட்டத்துக்காக.. 5 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி மரங்கள் வெட்டி அழிப்பு.. மத்திய அரசு தகவல்
டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் ஒரு கோடி மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறை இணையமைச்சரான பபுல் சுப்ரியா பதில் அளித்துள்ளார்.
அவரது பதிலில் 2014-19 காலகட்டத்தில் மத்திய அரசானது தனது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த 1,09,75,844 மரங்களை வெட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
2015-16ஆம் ஆண்டில் 17லட்சம்
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த 2014-15ஆம் ஆண்டில் 23,34,319 மரங்கள் வெட்டி அளிக்கப்பட்டுள்ளது. 16,96,917 மரங்கள் , 2015-16ஆம் ஆண்டில் இதே காரணங்களுக்காக வெட்டப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 17,01,416 மரங்களும், 2017-18ஆம் ஆண்டில் 25,52,164 மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
வளர்ச்சியின் பெயரில் அழிப்பு
2018-19ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 26,91,028 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை தவிர காட்டுத் தீ மூலம் எரிந்த மரங்கள் குறித்த புள்ளிவிவரங்களும், வெட்டப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், பருவ நிலை மாறுபாடுகளையும் மனதில் கொண்டு பொது மக்கள் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறப்படும் இந்த நிலையில் இவ்வளவு மரங்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரம் நடுவதற்கு திட்டம்
ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்படும் சூழலில் மத்திய அரசு மரங்களை வளர்ப்பதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.237.07 கோடி நிதியை அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 87,113.86 ஹெக்டேர் பரப்புக்கு வன விரிவாக்கத்துக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் வனப் பரப்பை 50 லட்சம் ஹெக்டேர் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தேசிய மரம் நடும் திட்டத்துக்காக ரூ.328.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பா.ஜ.க நமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.