250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி
ஆக்ரா: டெல்லியின் ஆக்ராவிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு 250 கி.மீ. தூரம் நடந்தே சென்ற ஒருவர் செல்லும் வழியில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளை தவிர பெரும்பாலான தொழில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. பணம் இல்லாமலும் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுவிட்டது.
கேள்விக்குறி
இதையடுத்து அண்டைய மாநிலங்களுக்கு தொழில் நிமித்தமாக வந்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்றனர். அந்த வகையில் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு நடந்தே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாரை சாரையாக 100-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தை கடக்க செல்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் வகையில் இவை இருந்தது.
தன்னார்வலர்கள்
இவர்களை உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்து வர அந்த மாநில அரசு சார்பில் பேருந்துகள் அனுப்பப்பட்டன. ஆயினும் அதிலும் முண்டியடித்து கொண்டு மக்கள் ஏறினர். இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பலர் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே செல்கின்றனர். இவர்களுக்கு செல்லும் வழியில் உணவு, தண்ணீர் ஆகியவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள்.
வேதனை
இவர்களை போல் ஆக்ராவிலிருந்து 200 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து மத்தியப்பிரதேசத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்புக் கூட இல்லாமல் ஏராளமானோர் நடந்து சென்ற காட்சி பார்ப்போர் மனதை வேதனையடையச் செய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை தங்கள் சொந்த ஊருக்கு ரன்வீர் சிங் (38) என்பவர் நடந்தே சென்றார். இவர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.
மத்திய பிரதேசம்
இவரது கிராமம் மத்திய பிரதேசத்தில் மொரோனா மாவட்டத்தில் உள்ளது. அதாவது தலைநகர் டெல்லியிலிருந்து 326 கி.மீ தூரம் ஆகும். இந்த நிலையில் அவரது ஊருக்கு செல்ல 80 கி,மீ. தூரம் இருந்த நிலையில் சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு டீக்கடை வைத்திருந்தவர்கள் டீ மற்றும் பிஸ்கெட்டை ரன்வீருக்கு கொடுத்தனர். இதையடுத்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.