ஒருபக்கம் சீதைகள் எரிப்பு.. இன்னொரு பக்கம் ராமருக்கு கோவில்: காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
டெல்லி: நாட்டில் ராமருக்கு கோவில் கட்டும்போது இன்னொரு பக்கம் சீதைகள் எரிக்கப்படுகின்றனர் என லோக்சபாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
லோக்சபாவில் தெலுங்கானா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்த குற்றவாளிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது, உத்தரப்பிரதேசம் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் எரிக்கப்பட்டது ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:
உத்தரப்பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால் இன்று அதர்ம பிரதேசமாக அது மாறி இருக்கிறது.
நாட்டில் என்னதான் நடக்கிறது?
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் எரிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 95% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
சீதைகள் எரிப்பு
ராமருக்கு கோவில் கட்டுகிறோம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் சீதைகள் உயிரோடு எரிக்கப்படுகின்றனர். இந்த குற்றவாளிகள் எப்படி தப்புகின்றனர்?. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து உன்னாவ் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் லோக்சபாவில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க உரிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் விசாரணை
தற்போது கீழ்நீதிமன்றத்தில் இருந்து விசாரணை தொடங்குகிறது. இனி உச்சநீதிமன்றமே இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க ஒரு குழுவை சபாநாயகர் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்மிருதி இரானி பேச்சு
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் இங்கே முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. ஒரு பெண் எழுந்து நின்று பேசுவதை நீங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
பலாத்கார சம்பவமே அரசியல் ஆயுதம்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலின் போது பலாத்கார சம்பவத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தினார்கள். அப்போது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள். பலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர்கள் என்றார்.
மன்னிப்பு கேட்க ஜவடேகர் வலியுறுத்தல்
மேலும் பலாத்கார சம்பவத்தை ராமர் கோவில் கட்டும் விவகாரத்துடன் இணைத்துப் பேசிய மேற்கு வங்க எம்பி (ஆதிர் ரஞ்சன் சவுத்ரி), மால்டா பலாத்கார சம்பவம் குறித்து ஏன் கண்டுகொள்ளவில்லை? என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும் போது சில எம்.பிக்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. அவர்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.