என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Recommended Video
டெல்லி: ஒரே நேரத்தில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார்.
அனைத்து மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு பல மடங்கு குறையும் என்பது பாஜக வாதமாக உள்ளது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் காலத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இதே போல. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
17ஆவது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
தேர்தல் வாக்குறுதி
ஆனால் மோடி அரசின் முதல் ஐந்தாண்டு காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது மீண்டும் மோடி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
பல விஷயங்கள்
இதில், தேர்தல் தொடர்பாக மட்டுமின்றி, இந்தியா சுதந்திரம் பெற்று, 2022ஆம் ஆண்டுடன், 75 ஆவது ஆண்டு விழா வருவதையொட்டியும், மற்றும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த வருடத்தை ஒட்டியும், அவற்றை விமரிசையாகக் கொண்டாடுவது எப்படி என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்கள் விருப்பமின்மையை தெரிவித்துள்ளனர்.
திமுக பங்கேற்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் லோக் சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டிஆர் பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின், சுப்ரியா, தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
எதிர்ப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல், நடைமுறைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது என்று, அதில், முடிவு செய்யப்பட்டது. இதை அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தெரிவிப்பார்கள். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். அதேநேரம், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைவர், சந்திரசேகரராவ் நிலைப்பாடு, மதில் மேல் பூனையாகவே உள்ளது.
கருத்து கேளுங்கள்
அவசரகதியில் இது போன்ற முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விட்டு, அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், ராமச்சந்திரன் பிள்ளை இது தொடர்பாக கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஒரே கலாச்சாரம்
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று நாட்டையே ஒற்றை தன்மைக்குள் அடைப்பதற்கு பாஜக முயற்சி செய்வதன் ஒரு அம்சம்தான், இதுபோன்ற தேர்தல் நடைமுறை என்றார் அவர். ஆம் ஆத்மி கட்சியும், மோடி அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராவத், கடந்த ஆண்டு தொடர்பாக ஒரு கருத்து தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு தேவைப்படும் அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இது போல ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று அவர் கூறியிருந்தார்.
சட்ட ஆணையம் ஆதரவு
அதேநேரம் இந்த ஐடியாவுக்கு ஆதரவும் கிடைத்துவருவதை, மறுக்க முடியாது. பாஜக தலைவர் அமித் ஷா, தேசிய சட்ட ஆணையத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, ஒரே நாடு ஒரே தேர்தல், நடைமுறைக்கு சாத்தியமா என்று விளக்கம் கேட்டிருந்தார். இது தொடர்பாக, சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை வெளிக்கொண்டு வந்தது. அதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து விட்டு, பிற அனைத்து மாநில சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, மக்கள் நலத்திட்டங்கள் அவ்வப்போது ஒத்தி வைக்கப் படுவது தவிர்க்கப்படும். மக்களின் வரிப்பணம் பெருமளவுக்கு சேமிக்கப்படும். நிர்வாக சுமை வெகுவாக குறைக்கப்படும். இதற்கு அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்திருந்தது.