காஷ்மீரின் ஒருபகுதி இந்தியாவிடம் இல்லாமல் போனதற்கு யார் காரணம்? நேரு மீது அமித்ஷா தாக்கு
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி இன்று இந்தியாவிடம் இல்லாமல் போனதற்கு முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடினார்.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கான தீர்மானம், மற்றும் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வசிப்போருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆகியவற்றை அமித்ஷா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது:
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை பாஜக சீர்குலைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை 132 முறை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ளனர்.
ஆட்சிகளை கலைத்த காங்கிரஸ்
இதில் காங்கிரஸ் கட்சி 93 முறை 356-வது பிரிவை பயன்படுத்தி உள்ளது. இப்போது அந்த காங்கிரஸார்தான் எங்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றி பாடம் நடத்துகிறார்கள்.
நேரு மீது தாக்கு
பாகிஸ்தானுடனான யுத்த நிறுத்தத்தை அறிவித்தது யார்? ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்தது ஜவஹர்லால் நேருதானே.. இன்று காஷ்மீரின் மூன்றில் 1 பகுதி நம்மிடம் இல்லை.
தடை செய்த பாஜக
அதுவும் அன்றைய உள்துறை அமைச்சரின் ஒப்புதலைக் கூட பெறாமலேயே இந்த நடவடிக்கையை எடுத்தார் நேரு. அதனால் மணீஸ்திவாரி எங்களுக்கு வரலாற்று பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டாம். ஜமாத் இ இஸ்லாமியை ஏன் தடை செய்யாமல் இருந்தீர்களே ஏன்? யாரை திருப்திபடுத்த தடை செய்யவில்லை?
இந்தியா பெயருக்கு எதிர்ப்பு
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மீது தடை விதித்தது யார்? பாஜக அரசுதானே அதை செய்தது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா என்ற வாசகமே இல்லாத காலமும் இருந்தது. ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்கிற பெயர் பலகையில் இந்தியா என்ற எழுத்துகள் துணியால் மூடப்பட்டிருக்கும் நிலை இருந்தது. அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் உயிரை பணயம் வைத்து முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி போன்றவர்கள் காஷ்மீரின் லால் சவுக்கில் தேசிய கொடியை ஏற்றினார்கள். அப்போது பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லை.
காஷ்மீருக்கு தனி பிரதமர்
ஜம்மு காஷ்மீரில் ஒருவித அச்சம் நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். இந்தியாவுக்கு எதிரானவர்கள்தான் அப்படியான கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஜம்மு காஷ்மீரத்தின் பொதுமக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். அந்த மக்களுக்காக வேலைவாய்ப்பு, அரசின் நில திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். 1931-ல் சேக் அப்துல்லா முஸ்லிம் மாநாட்டு கட்சியை தொடங்கினார். அன்று காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடைசியாக காஷ்மீரின் பிரதமரானார் சேக் அப்துல்லா.
முகர்ஜியின் மர்ம மரணம்
1953-ல் ஷியாமா பிரசாத் முகர்ஜி, ஒரு தேசத்துக்கு 2 பிரதமர்களா? என எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீருக்குள் நுழைந்தார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர் இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்துக்காக சியாமா பிரசாத் முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைச்சாலையிலேயே மாண்டு போனார். இன்றுவரை அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படவில்லையெஎ ஏன்? அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ஒருவரது மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணை ஏன் நடத்தப்படவில்லை?
இவ்வாறு அமித்ஷா பேசினார்.