மோடி- ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பின் ஓராண்டு நிறைவு- இருதரப்பு உறவில் மிக ஆழமான விரிசல்!
டெல்லி: பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் இருதரப்பு உறவு தொடர்பாக ஆலோசனை நடத்தி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இந்த ஓராண்டில் இந்தியா- சீனா இடையேயான உறவு மிக மோசமான நிலையில்தான் உள்ளது.
2019-ம் ஆண்டு அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் உலகத்தின் பார்வை முழுவதும் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் மீதுதான் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி சீனா அதிபர் ஜின்பிங் சென்னை வருகை தந்தார்.
பின்னர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார் ஜின்பிங். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அக்டோபர் 12-ந் தேதியன்று மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட்டபடியே இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக கடன் வாங்க முடியாது: ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு
எல்லையில் அத்துமீறிய சீனா
இந்தியா- சீனா உறவில் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடிய சந்திப்பாக இருக்கும் என்றுதான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பின் சீனாவுடனான உறவுகள் படுமோசமான நிலைக்குப் போய்விட்டதுதான் சோகம். மாமல்லபுரம் சந்திப்புக்கு அடுத்த சில மாதங்களிலேயே லடாக்கின் கிழக்கில் ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மேற்கொண்டது.
ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம்
இதனை நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொரு முறையும் தடுத்து நிறுத்தினர். இந்த மோதல்களில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளிடையேயான உறவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இன்னமும் இந்த பதற்றம் ஓயவில்லை.
எல்லைதோறும் தொல்லை
கிழக்கு லடாக், இமாச்சல பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஒவ்வொரு எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடருகிறது. இந்த பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னமும் இந்த பதற்றம் தணியாமல்தான் இருக்கிறது.
முன்னைவிட படுமோசம்
இந்தியா-சீனா உறவில் மாமல்லபுரம் பேச்சுவார்த்தைகள் ஒரு அடையாளத்துக்குரியதாக மட்டுமே இருந்துவிட்டது. இருநாடுகளிடையே புதிய உறவுகளை, முந்தைய உறவுகளை வலிமையாக்கும் நிலையை எதுவும் ஏற்படுத்தாமல் போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.