ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது சரியா? ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது சரிதான் என்று 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கருணாநிதி, சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் ஆற்றிய உரை இப்போது அகில இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வேட்பாளர்
ராகுல் காந்தியே வருக.. நல்லாட்சி தருக என கூறிய ஸ்டாலின், அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியே இதுவரை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடாத நிலையில், ஸ்டாலின் இப்படி முன்மொழிந்துள்ளதால், ஒரு சேர வரவேற்பு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள், வெவ்வேறு தரப்புகளில் இருந்து வெளியாகியபடி உள்ளன.
வாசகர் கருத்து
நமது வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட் சார்பில் கருத்துக் கணிப்பு போல் ஒன்றை நடத்தியிருந்தோம். அதில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்தது சரியா? என்ற கேள்வியும், அதற்காக 3 ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டன.
பெரும்பாலான மக்கள்
இதில், சரிதான் என்று, 62.48% பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பெருவாரியான மக்கள், திமுகவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. தவறு என்று, 12.36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மொத்த கருத்துக் கணிப்பில் வாக்களித்தவர்களில் இது சிறு அளவுதான் என்பது கவனிக்கத்தக்கது.
தவிர்த்திருக்கலாம்
தவிர்த்திருக்கலாம் என்று 25.16 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் அர்த்தம், கூட்டணிக்குள் குழப்பம் வரலாமோ என்பதாகவும் இருக்கலாம், அல்லது பொறுமையாக அறிவித்திருக்கலாம் என்பதாகவும் இருக்கலாம். ஆனால், சரி, தவறு என முடிவெடுக்க முடியாத குழப்ப மனநிலையிலும் கணிசமானோர் இருப்பதை இந்த ஆப்ஷன் தெளிவுபடுத்துகிறது.