மழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை
பல மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் வெங்காய செடிகள் அழுகி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைவாக உள்ளதால் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்மழையால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் புனே, மும்பை சந்தைகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக தலைநகர் சென்னை தொடங்கி திருப்பூர், கோவை,மதுரை வரை பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலே உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் உரிக்காமலேயே கண்ணீர் வடிக்கின்றனர்.
வெங்காயம் இல்லாமலேயே சாம்பார் வைப்பது எப்படி என்று ரெசிபி பார்க்க ஆரம்பித்து விட்டனர் அந்த அளவிற்கு வெங்காய விலை இல்லத்தரசிகளை யோசிக்க வைத்து விட்டது. பிரியாணிக்கு சைடிஸ் ஆனியன் ரைத்தா செய்ய வேண்டுமா என்று கேட்கும் அளவிற்கு வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து பல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தின் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படும்.
வெங்காய சாகுபடி பாதிப்பு
மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பெரிய வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்திற்கு வரவேண்டிய பெரிய வெங்காயம் வரத்து 80 சதவிகிதம் குறைந்ததால், விலை படிப்படியாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
சின்ன வெஙகாயம்
ஆந்திரா, கர்நாடகா, கடுமையான மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்லாரி, சின்ன வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினம் 60 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது, இது 30 லாரிகளாக குறைந்துள்ளது. மேலும் சின்ன வெங்காயம் 15 லாரிகளில் வந்தது, தற்போது 8 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால், வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ. 100 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ரூ 110 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.
எகிப்து வெங்காயம் வருகை
திருப்பூரில்ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் தென்னம்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். வரத்து குறைவானதால் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் எகிப்து வெங்காயம் 21 டன் சந்தைக்கு வந்துள்ளதால் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. எகிப்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு குறைவாகவே உள்ளது.
அத்தியாவசிய தேவை
ஆந்திரா, கர்நாடகாவில் மழை பாதிப்பு குறையவில்லை என்றால் மேலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் ஏரியாவுக்கு தகுந்தவாறு 100, ரூ.110, ரூ.120 வரை விற்கப்படுகிறது. சாம்பார், பஜ்ஜி, ரைத்தா செய்யவும் சமையலுக்கு அத்தியாவசிய தேவையான வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். வெங்காய விலை உயர்வை தடுக்க மாநில அரசு ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டாலும் அது ரேசன் போல கொடுப்பதால் அந்த வெங்காயத்தை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தீபாவளி பண்டிகை வரை சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவே கூறுகின்றனர் வியாபாரிகள்.