ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க யோசனை.. சசிதரூர் தனிநபர் மசோதா தாக்கல்
டெல்லி: ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்கும் வகையில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தாக்கல் செய்தார்.
ஆன்லைன் மூலம் விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுகள் இளைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.இதில் சில விளையாட்டுகள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடியும் நடைபெறுகிறது.
இதை தடுக்கும் வகையில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தாக்கல் செய்தார். ஆன்லைன் விளையாட்டு மற்றும் மோசடி தடுப்பு மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மோசடிகள் தடுக்க வகை செய்யப்படும்.
மசோதாவை தாக்கல் செய்த சசிதரூர் பேசியதாவது: விளையாட்டுகளால் ஏற்படும் பயன்களை பாதுகாக்க வேண்டுமென்றால், விளையாட்டுகளில் நேர்மை இருப்பது அவசியம். பல்வேறு மோசடி மற்றும் ஊழல்களால் விளையாட்டில் நேர்மைக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
மேலும், இந்த மோசடிகள் மற்றும் சூதாட்டங்களை குற்றமாக்குவதன் மூலம் விளையாட்டில் நேர்மையை தனது மசோதா பாதுகாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.