கெஜ்ரிவால் தொகுதியில் மட்டும் 1.14 லட்சம் சிசிடிவி கேமராக்கள்.. வாக்குறுதியை நிறைவேற்ற துரித பணிகள்
டெல்லி: சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, தலைநகர் டெல்லி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை ஆம் ஆத்மி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தது ஆம் ஆத்மி.
ஊழலை எதிர்க்கும் கட்சி என்ற பெரிய பிம்பத்துடன் களமிறங்கியதால், சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். கெஜ்ரிவால் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் உருண்டோடி விட்டது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சிசிடிவி கேமராவின் கட்டுப்பாட்டில் டெல்லி நகரம் கொண்டு வரப்படும், என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி தோல்வியுற்றது. இதில் 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி. இதனால் அக்கட்சி தலைமை அதிர்ச்சியடைந்தது.
புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி... திமிங்கலம் அருகில் வந்து விளையாடி செல்லும் ஆச்சரியம்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என அஞ்சுகிறது ஆம் ஆத்மி.
இதனையடுத்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது கெஜ்ரிவால் அரசு அக்கறை காட்டி வருகிறது.
டெல்லி நகர் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக முதல்வர் கெஜ்ரிவாலின் புதுடெல்லி தொகுதியில் மட்டும், சுமார் 1.14 லட்சம் சிசிடிவி கேமாக்கள் பொருத்தும் பணி கடந்த வாரம் துவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தற்போது விரைந்து செய்வதாக கூறியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளது ஆம் ஆத்மி.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி, தனது தொகுதியில் ஜூன் 15 முதல் கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கி நடைபெற உள்ளது என்றார். தனிநபர்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உரியவர்களின் ஒப்புதலை பெற்று, கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சிசிடிவி கேமராக்களுக்கு தேவையான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மின் கட்டணத்திற்கு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.